பட்டியல் சமூகத்தினருக்கு எதிரான வன்கொடுமை வழக்குகளில் பொய் சாட்சியம் அளிப்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டப்பிரிவை நீக்கக்கோரிய வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
Summary
திருச்சி வழக்கறிஞர் ஷாஸிம் சாகர், 1989 வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் படி பட்டியல் சமூகத்திற்கு எதிராக பொய் சாட்சியம் அளித்தால், மரண தண்டனை விதிக்கும் பிரிவை செல்லாது என அறிவிக்க கோரி வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து, நீதிபதிகள் மத்திய அரசுக்கு பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.
திருச்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஷாஸிம் சாகர் மதுரை அமர்வில், “பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிரான கொடுமைகளைத் தடுக்கும் நோக்கில், 1989 ஆம் ஆண்டு வன்கொடுமை தடுப்புச் சட்டம் நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின் 3 2(ஐ) பிரிவின் படி பட்டியலின அல்லது SC/ST சாராத ஒரு நபர், வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட பட்டியல் சமூகத்திற்கு எதிராக பொய் சாட்சியம் அளித்தால் அவருக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

மதுரை உயர் நீதிமன்றம்
இந்தியாவில் மரண தண்டனை அரிதிலும் அரிதான வழக்குகளில் மட்டுமே வழங்கப்படுகிறது. மேலும் குடிமக்களின் அடிப்படை உரிமைகளை நடைமுறைப்படுத்த நீதிமன்றத்திற்கு அதிகாரம் அளிக்கும் அரசியலமைப்பின் 32வது பிரிவின் கீழ், மரண தண்டனையை மறுபரிசீலனை செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனவே, இதுபோன்ற வழக்குகளில் மரண தண்டனை விதிக்கும் பிரிவை செல்லாது என அறிவிக்க வேண்டும். மேலும், இந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போது, இந்தச் சட்டப்பிரிவின் செயல்பாட்டிற்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரியும் மதுரை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. மேலும், இந்த வழக்கில் வழக்கறிஞர் ஜெகன் தரப்பில், இந்த மனுவை தள்ளுபடி செய்யக் கோரி இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. மத்திய அரசுத் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது. இதனை தொடர்ந்து, நீதிபதிகள், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் செயலர் மற்றும் மத்திய சட்ட அமைச்சகத்தின் செயலர் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்னர்.
