
ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்தப்போவதாக மோடி உத்தரவாதம் அளித்துள்ளார் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறி இருப்பது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டு நலன்களை கருத்தில் கொண்டு முடிவெடுப்போம் என வெளியுறவுத் துறை பதில் அளித்துள்ளது. இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி சர்வதேச அளவில் பேசு பொருளாகி இருப்பதன் பின்புலத்தைப் பார்க்கலாம்.

கச்சா எண்ணெய்
உலக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா மூன்றாவது பெரிய நாடாகும். இந்தியா தனது உள்நாட்டு கச்சா எண்ணெய் தேவையில் 85 சதவீதத்துக்கும் அதிகமாக வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்கிறது.
2022ஆம் ஆண்டு உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த நிலையில், அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகள் விதித்தது. ரஷ்யாவிடமிருந்து உலக நாடுகள் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை தவிர்க்க அமெரிக்கா கோரியது. இந்தச் சூழலில் ரஷ்யா தனது கச்சா எண்ணெய்யை சலுகை விலையில் விற்பனை செய்யத் தொடங்கியது. இதை வாய்ப்பாகப் பயன்படுத்தி, இந்தியா ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை படிப்படியாக அதிகரித்தது.

ரஷ்யா – உக்ரைன் போர்
ரஷ்யா -உக்ரைன் போருக்கு முன்பு இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் ரஷ்யாவின் பங்கு வெறும் ஒரு சதவீதத்துக்கும் குறைவாகவே இருந்தது. தற்போது அது 35 சதவீதமாக உயர்ந்து இந்தியாவுக்கான முன்னணி கச்சா எண்ணெய் விநியோக நாடாக ரஷ்யா உருவெடுத்துள்ளது. ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு அப்போது அமெரிக்காவில் ஆட்சியில் இருந்த பைடன் அரசு கண்டனம் தெரிவித்தது. மீண்டும் ஆட்சிக்கு வந்த ட்ரம்ப் ஒருபடி மேலே சென்று, ரஷ்யாவின் கச்சா எண்ணெயை வாங்குவதன் காரணமாகவே இந்தியா மீதான வரியை 50 சதவீதம் உயர்த்தினார்.
அமெரிக்காவின் வரி விதிப்பால் இந்தியாவின் ஏற்றுமதி கடும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது. இந்தச் சூழலில் அமெரிக்காவுடனான வர்த்தக உறவை சீர்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது. ரஷ்யாவுடனான எண்ணெய் இறக்குமதியை இந்தியா முழுமையாகக் கைவிடுமா அல்லது பகுதியளவில் குறைக்குமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், இந்தியாவின் இம்முடிவு சர்வதேச பொருளாதார உறவுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், உலக நாடுகள் இந்தியாவின் நிலைப்பாட்டை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன.