
ஆஸ்பத்திரிகள் மற்றும் வழிபாட்டுத்தலம் உள்ள இடங்களில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என பொதுமக்களுக்கு கலெக்டர் பிரியங்கா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தீபாவளி நெறிமுறைகள்
தீபாவளி பண்டிகை மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் திருநாளாகும். இந்த நாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வேளையில், பட்டாசுகளை வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீர், காற்று உள்ளிட்டவை பெருமளவில் மாசுபடுகின்றன. பட்டாசு வெடிப்பதால் எழும் அதிகப்படியான ஒலி மற்றும் காற்று மாசினால் சிறு குழந்தைகள், வயதான பெரியோர்கள் மற்றும் வயதானவர்கள் உடல் அளவிலும், மனதளவிலும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவில், பட்டாசுகளை வெடிப்பதால் காற்றின் தரம் பாதிக்கப்படுவது குறித்து போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும், திறந்த வெளியில் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க மாநில அரசுகள் வலியுறுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. மேலும், தீபாவளி பண்டிகையன்று காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையில் மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து அனுமதி வழங்கியது.
சுற்றுச்சூழலை பேணி காக்க பொதுமக்கள் கீழ்க்கண்டவற்றைக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்று மாசுபடுத்துகின்ற தன்மையும் கொண்ட படிமைப் பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சர வெடிகளை தவிர்க்க வேண்டும். ஆஸ்பத்திரிகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும். குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பிடிக்கக்கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். என அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.