தமிழகத்தில் சட்டமன்றப் பொதுத் தேர்தலை நடத்துவதற்காக ரூ.1,302 கோடி தேர்தல் ஆணையத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலத் தேர்தலுக்கான அறிவிப்பை மார்ச் 15ஆம் தேதி தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி, தமிழ்நாட்டில் ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெறவிருக்கிறது. தேர்தல் அறிவிப்பு வெளியான அன்றிலிருந்தே, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலாகியது. மார்ச் 30-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கிய சூழலில், நேற்றுடன் நிறைவடைந்திருக்கிறது. தொடர்ந்து, இன்று தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களுக்கான பரிசீலனை நடைபெறுகிறது.

தேர்தல் ஆணையம்
இந்தசூழலில் தான், இன்று தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், சட்டமன்றத் தேர்தல் பணிகளுக்காக 1,302 கோடி ரூபாய் பெறப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு ரூ795 கோடி ரூபாயும், 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு ரூ.1,009 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டு செலவிடப்பட்டது. இந்த முறை ரூ.1,302 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
அதேபோல், மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் என 5,938 வாக்குச்சாவடிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அந்த வாக்குச்சாவடிகளில் கூடுதலாக துணை ராணுவம், நுண் பார்வையாளர்கள், கண்காணிப்பு கேமரா வைத்து கண்காணிக்கப்படும். அதிக வெப்பம் காரணமாக வாக்குப்பதிவின்போது, மையங்களில் வாக்காளர்களுக்கு பந்தல் மற்றும் இருக்கைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதோடு, வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றும் அலுவலர்களுக்கும் அடிப்படை வசதிகள் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.

அர்ச்சனா பட்நாயக்
தொடர்ந்து பேசிய அவர், தமிழகம் முழுவதும் ஒட்டுமொத்தமாக 43,220 புகார்கள் பெறப்பட்டுள்ள நிலையில், சி விஜில் செயலி மூலமாக 2,600 புகார்கள் பெறப்பட்டு, அதில் 2,364 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், தமிழகம் முழுவதும் ரூ. 462 கோடி மதிப்பிலான பொருட்கள் மற்றும் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதில், ரூ.182 கோடி அமலாக்கத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. மீதமுள்ள 279 கோடி ரூபாய் மதிப்பிலான ரொக்கம் மற்றும் பொருள்கள் பொது மக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். தேர்தல் பணிக்காக வரும் 13ஆம் தேதிக்குள் துணை ராணுவப் படையினர் தமிழகம் வந்தடைவார்கள் என கூறிய அவர், 85 வயதிற்கு மேற்பட்ட 2.5 லட்சம் வாக்காளர்கள் தபால் வாக்குக்காக பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
