பெண்களை இலக்காகக் கொண்டு நேரடி பணப் பரிமாற்றத் திட்டங்களை இந்தியாவில் பல மாநில அரசுகள் அறிமுகப்படுத்தியுள்ளன. அவை நிதி சுதந்திரத்தை மேம்படுத்துவதையும் தேர்தல் ஆதரவைப் பெறுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.
தமிழ்நாடு உட்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மகளிருக்கான மாதாந்திர உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. திமுக மீண்டும் ஆட்சி அமைத்தால் தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டும் வரும் மாதம் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத் தொகை மாதம் ரூ.2000 ஆக உயர்த்தப்படும் என்று முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். முன்னதாக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி, தனது கட்சி ஆட்சி அமைத்தால் மகளிர் உதவித் தொகை மாதம் 2000 ரூபாயாக உயர்த்தப்படும் என்று அறிவித்திருந்தார்.
தமிழ்நாடு உட்பட பல்வேறு இந்திய மாநிலங்களில் மகளிருக்கான மாதாந்திர உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில், ’கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’ என்ற பெயரில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ1,000 திமுக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் தமிழகத்தில் பெண்களுக்கு வரவேற்பைப் பெற்றுத் தந்த நிலையில், மற்ற மாநிலங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. அந்த வகையில், மேற்குவங்க மாநிலத்தில் லட்சுமி பந்தர் திட்டத்தின்கீழ் பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது. அதேநேரத்தில், பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடி வகுப்புகளைச் சேர்ந்த பெண்களுக்கு ரூ.1,200 வழங்கப்படுகிறது. அசாம் மாநிலத்தில் அருணோதய் திட்டத்தின்கீழ் பெண்களுக்கு ரூ1,250 வழங்கப்படுகிறது.

Mahila Samruddhi
தெலங்கானாவில் மகாலட்சுமி திட்டத்தின்கீழ் மாதம் ரூ.2,500 வழங்கப்படுகிறது. மத்தியப் பிரதேசத்தில் முதல்வரின் லாட்லிபெஹ்னா திட்டத்தின்கீழ் மாதம் ரூ.1,250 வழங்கப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில் கிருஹ லட்சுமி திட்டத்தின்கீழ் மாதம் ரூ.2,000 வழங்கப்படுகிறது. மஹாராஷ்டிராவில் முக்யமந்த்ரி மாஜி லட்கி பஹின் யோஜனா திட்டத்தின்கீழ் மாதம் ரூ.1,500 வழங்கப்படுகிறது. ஜார்க்கண்டில் முதல்வரின் மையன் சம்மான் திட்டத்தின்கீழ் ரூ.2,500 வழங்கப்படுகிறது. சத்தீஸ்கரில் மாத்ரி வந்தன் திட்டத்தின்கீழ் மாதம் ரூ.1,000 வழங்கப்படுகிறது.
ஹரியானா மாநிலத்தில் லாடோ லட்சுமி திட்டத்தின்கீழ் மாதம் ரூ.2,100 வழங்கப்படுகிறது. இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் இந்திரா காந்தி பியாரி பெஹ்னா திட்டத்தின்கீழ் மாதம் ரூ.1,500 வழங்கப்படுகிறது. ஒடிசா மாநிலத்தில் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 என்ற கணக்கில் 5 ஆண்டுகளுக்கு ரூ.50,000 வழங்கும் சுபத்ரா திட்டம் நடைமுறையில் உள்ளது. பிஹார் மாநிலத்தில் குடும்பப் பெண்கள் தொழில் தொடங்குவதற்கான முதல்கட்ட ஊக்கத் தொகையாக கடந்த ஆண்டு செப்டம்பரில் ரூ.10,000 வழங்கப்பட்டது.

Mahila rojgar yojana
ஒன்றிய பிரதேசமான டெல்லியில் மஹிலா சம்ருதி திட்டத்தின்கீழ் மாதம் ரூ.2,500 வழங்கப்படுகிறது. புதுச்சேரி அரசு வழங்கி வந்த ரூ.1,000 மாதாந்திர மகளிர் உதவித்தொகையை கடந்த நவம்பரில் ரூ.2,500 ஆக உயர்த்தியது. இந்த மகளிர் உரிமைத்தொகையைப் பெறுவதற்கு வயது, திருமண நிலை, பொருளாதாரச் சூழல் போன்ற பல்வேறு தகுதி வரையறைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த தகுதி வரையறைகளை தளர்த்தி கூடுமானவரை அனைத்துப் பெண்களையும் உரிமைத் தொகை பயனர்களாக மாற்ற மாநில அரசுகள் முயன்று வருகின்றன.
