ஈரான் மீதான அமெரிக்கா -இஸ்ரேல் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்காவின் விமானங்களுக்கு ஸ்பெயின் தனது வான்வெளியை மூடியுள்ளது.
ஈரான் மீதான தாக்குதல்களில் ஈடுபடும் அமெரிக்க விமானங்களுக்கு ஸ்பெயின் தனது வான்வெளியை மூடிவிட்டதாகவும், விமானங்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்கான திட்டங்கள் உட்பட அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது எனவும் ஸ்பெயினின் பாதுகாப்பு அமைச்சர் மார்கரிட்டா ரோபல்ஸ் தெரிவித்துள்ளார். மேலும், “ஈரானில் நடக்கும் போர் தொடர்பான எந்தவொரு நடவடிக்கைகளுக்கும் மொரோன் மற்றும் ரோட்டாவைப் [இராணுவத் தளங்களை] பயன்படுத்த நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்றும் அவர் கூறியுள்ளார் .

Rota , naval Station , Spain
அதன்படி, ஐரோப்பாவில் உள்ள 80,000 அமெரிக்கப் படைகளுக்கு தளவாட ஆதரவை வழங்குவது போன்ற இருதரப்பு ஒப்பந்தத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு, அமெரிக்க இராணுவ விமானங்கள் இந்தத் தளங்களைத் தொடர்ந்து பயன்படுத்தலாம். அதாவது ஆபரேஷன் எபிக் ஃபியூரி’யில் பங்கேற்கும் குண்டுவீச்சு அல்லது எரிபொருள் நிரப்பும் விமானங்கள் வானில் வட்டமிடுவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. ஸ்பெயினின் இந்தத் தடைக்கு ஒரே ஒரு விதிவிலக்கு உண்டு. அதாவது, அவசரகாலச் சூழ்நிலைகளில், சம்பந்தப்பட்ட விமானங்கள் வானில் வட்டமிடவோ அல்லது தரையிறங்கவோ அனுமதிக்கப்படும்.
அமெரிக்காவுக்கு ஏற்பட்ட சிக்கல்!
ஸ்பெயின் தனது வான்வெளியை மூடியிருப்பது அமெரிக்காவின் முயற்சிகளைச் சிக்கலாக்கியுள்ளது. சுமார் பதினைந்து KC-135 விமானங்கள் ஸ்பெயினிலிருந்து பிரான்ஸ் அல்லது ஜெர்மனிக்கு புறப்பட்டன. இந்த எரிபொருள் நிரப்பும் விமானங்கள் வான் சக்தியின் ஓர் அடிப்படைத் தூணாக விளங்குகின்றன.

Moron Air Base , Spain
அமெரிக்கா தனது B-52 குண்டுவீச்சு மற்றும் B-1 ரக விமானங்களுக்கு ஐரோப்பாவில் ஒரு மாற்று இடத்தைத் தேட வேண்டியிருந்தது. தற்போது, இந்த விமானங்கள் தென்கிழக்கு இங்கிலாந்தின் குளோசெஸ்டர்ஷையரில் (Gloucestershire) உள்ள ஃபேர்ஃபோர்ட் (Fairford) விமானத் தளத்தில் வைக்கப்பட்டுள்ளன. இந்த விமானங்கள் எரிபொருள் நிரப்பாமல் ஈரானைத் தாக்கிவிட்டு இங்கிலாந்துக்குத் திரும்பும் அளவுக்குப் போதுமான தூரம் பறக்கும் திறன் கொண்டிருந்தாலும், நடைமுறை காரணங்களுக்காக, அவை சுமந்து செல்லக்கூடிய குண்டுகளின் அளவு, அவற்றின் எரிபொருளின் அளவிற்கு நேர்மாறான விகிதத்தில் உள்ளது. புறப்படும்போது அவை எவ்வளவு குறைவாக எரிபொருள் கொண்டு செல்கின்றனவோ, அவ்வளவு அதிக வெடிமருந்துகளை அவற்றால் ஏற்ற முடியும்.
இங்கிலாந்தின் ஃபேர்ஃபோர்டில் இருந்து புறப்படும் குண்டுவீச்சு விமானங்கள், பிரான்சின் வடக்கிலிருந்து தெற்காகக் கடந்து மத்தியதரைக் கடலை அடைந்தவுடன் எரிபொருள் நிரப்ப வேண்டும் என்றும், இது பெரும் அபாயங்களைக் கொண்டது என்றும் பாதுகாப்பு வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். குண்டுவீச்சு விமானங்கள் பிரான்சின் வான்பரப்பில் பறக்காத சில சமயங்களில் — அவற்றின் சுமை காரணமாக பாரிஸ் அனுமதி அளிக்காததாலோ அல்லது செயல்பாட்டுக் காரணங்களாலோ — அவை ஜிப்ரால்டர் நீரிணை வழியாக நுழைவதற்காக ஐபீரிய தீபகற்பத்தைச் சுற்றி வர வேண்டியிருக்கிறது .

airplane refuel in the air
பல்வேறு தருணங்களில் போரை எதிர்த்த ஸ்பெயின்
பிப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியவுடன் ஸ்பெயின் பிரதமர், மாட்ரிட் சர்வதேச சட்டத்திற்கு அப்பாற்பட்ட, நியாயமற்ற மற்றும் ஆபத்தான இராணுவத் தலையீடு என்றார். பின்பு போருக்கு ஆதரவு இல்லை என்றார். மற்றுமொரு தருணத்தில் இந்தப் பேரழிவை நாங்கள் எதிர்க்கிறோம் என்றார்
இதைத் தொடர்ந்து, ஈரான் போருக்கு ஸ்பெயின் காட்டும் எதிர்ப்பின் காரணமாக, அந்நாட்டின் மீது முழுமையான வர்த்தகத் தடையை விதிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அச்சுறுத்தினார். ஸ்பெயின் மிகவும் மோசமாக நடந்துகொண்டுள்ளது. அதனால் மாட்ரிட்டுடனான அனைத்துத் தொடர்புகளையும் துண்டிக்குமாறும் கூறினார்.

Spain PM Pedro Sánchez
சான்செஸ், அரசியல் நெருக்கடிகளிலிருந்து மீண்டும் மீண்டும் தப்பிப் பிழைப்பதில் பெயர் பெற்றவர். சரிந்துவரும் வாக்கெடுப்பு சதவிகிதம் மற்றும் அவரது கட்சிக்குள் தொடரும் ஊழல்கள் இருந்தபோதிலும் இவ்வாறு ட்ரம்புக்கு எதிராக செயல்படுவது தனக்குச் சாதகமாக அமையும் என்று அவர் கருதுகிறார்.
ட்ரம்பை எதிர்த்து நிற்பதன் மூலம், தனது மனைவி மீதான ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து பொதுமக்களின் கவனத்தைத் திசை திருப்ப முடியும் என்றும் அவர் நம்புகிறார்
சான்செஸின் நிலைப்பாடு அரசியல் ரீதியாகப் பலனளிக்குமா என்பதை காலம்தான் சொல்லும். எப்படி இருந்தாலும் அவரின் செயல் ஐரோப்பாவின் போக்கை வடிவமைக்கும்; இந்த உத்தி வெற்றி பெற்றால், அது மற்ற ஐரோப்பியத் தலைவர்களை வாஷிங்டனுக்கு எதிராகப் பதிலடி கொடுக்க ஊக்குவிக்கும் .
