வங்கதேசத்தில் பிஎன்பி கட்சியின் தலைவர் தாரிக் ரஹ்மான் இன்று பிரதமராக பதவியேற்கிறார்.
வங்கதேசத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், வங்கதேச தேசியவாதக் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியமைக்கிறது. இதையடுத்து, அக்கட்சியின் தலைவர் தாரிக் ரஹ்மான் இன்று வங்கதேச பிரதமராக பதவியேற்கிறார். அவர் இந்திய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
வங்காளதேச தேசியவாதக் கட்சி அமோக வெற்றி
அண்டை மாநிலமான வங்கதேசத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ப்புக்குப் பிறகு, கடந்த 12ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் ஷேக் ஹசீனாவின் கட்சி தடை விதிக்கப்பட்ட நிலையில், முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச தேசியவாதக் கட்சியும் (BNP), அதன் போட்டியாளரும் ஒருகாலத்தில் அக்கட்சியின் கூட்டாளியுமாக இருந்த ஜமாத்-இ-இஸ்லாமியும் களத்தில் சந்தித்தன. தாரிக் ரஹ்மான் 10 கட்சிகள் அடங்கிய கூட்டணிக்கு தலைமை தாங்கினார். மறுபுறம், 11 கட்சிகளைக் கொண்ட ஜமாத்-இ-இஸ்லாமி பங்களாதேஷ் (JIB) கூட்டணிக்கு ஷஃபிகுர் ரஹ்மான் தலைமை தாங்கினார். மொத்தமுள்ள 300 தொகுதியில் ஒரு தொகுதியில் வேட்பாளர் மறைவால் மீதமுள்ள 299 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. இதில் 51 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 1,755 வேட்பாளர்கள், 273 சுயேட்சைகள் போட்டியிட்டனர்.

தாரிக் ரகுமான்
இத்தேர்தலில், வங்காளதேச தேசியவாதக் கட்சி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அமோக வெற்றியைப் பெற்றது. தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட அதிகாரப்பூர்வமற்ற முடிவுகளின்படி, BNP 297 இடங்களில் 209 இடங்களைப் பிடித்தது, அதேநேரத்தில் பாகிஸ்தானுக்கு நெருக்கமாக இருப்பதாக அறியப்படும் வலதுசாரி ஜமாத்-இ-இஸ்லாமி 68 இடங்களைப் பெற்றது. இதையடுத்து BNP, 20 ஆண்டுகளுக்குப் பிறகு அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிப் பீடத்தில் அமர்கிறது. முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகனான தாரிக் ரஹ்மான், வங்கதேசத்தின் பிரதமராக இன்று பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஷேக் ஹசீனாவின் வெளியேற்றத்திற்குப் பிறகு 18 மாதங்களாக நீடித்த இடைக்கால ஆட்சியைத் தொடர்ந்து,பிஎன்பியின் இந்த வெற்றி அந்த நாட்டில் ஒரு முக்கிய அரசியல் திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது. இந்திய பிரதமர் நரேந்திர மோடியும்தாரிக் ரஹ்மானுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, ஷேக் ஹசீனாவைத் திருப்பி அனுப்பும்படி இந்தியாவிடம் முறைப்படி கோரிக்கை விடுக்க புதிதாக அமைய உள்ள வங்கதேச தேசியவாதக்கட்சி அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து பேசியுள்ள வங்கதேச தேசியவாதக் கட்சி தலைவர்கள், ஷேக் ஹசீனாவை நாடு கடத்தும்படி இந்தியாவிடம் கோரிக்கை விடுக்கும் வகையில் கடிதம் அனுப்பப்படும் என்று கூறினர். 2024ஆம் ஆண்டு கிளர்ச்சியில் நடந்த உயிரிழப்புகள், மனித உரிமை மீறல்கள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஷேக் ஹசீனா மீது வங்கதேசத்தில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என வங்கதேச தேசியவாதக் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

தாரிக் ரஹ்மான்
யார் இந்த தாரிக் ரஹ்மான்?
வங்கதேச அரசியலின் ‘இருண்ட இளவரசர்’ என்றும், நாட்டின் மிகவும் சக்திவாய்ந்த வம்சங்களில் ஒன்றின் வாரிசு என்றும் ஒருகாலத்தில் பார்க்கப்பட்ட தாரிக் ரஹ்மான் தற்போது ’தாரிக் ஜியா’ என அழைக்கப்படுகிறார், மறைந்த முன்னாள் பிரதமரும் வங்கதேச தேசிய கட்சி தலைவருமான கலிதா ஜியாவின் மகன் ஆவார். 1971ஆம் ஆண்டு விடுதலைப் போரின் வீரரும், பிஎன்பியின் நிறுவனருமான அவரது தந்தை அதிபர் ஜியாவுர் ரஹ்மான், 1981ஆம் ஆண்டு ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் படுகொலை செய்யப்பட்டார். கணவர் ஜியாவுர் ரஹ்மான் கொல்லப்பட்ட பிறகு 1980களில் கலீதா ஜியா அரசியலில் நுழைந்தார்.
17 ஆண்டுகள் லண்டனில் தஞ்சம் அடைந்திருந்த தாரிக்!
ஜியா என்ற குடும்பப்பெயரை அடிக்கடி பயன்படுத்தி வந்த தாரிக், தனது தாயார் கலீதா ஜியாவின் மூலம் அரசியலுக்குள் நுழைந்தார். ரஹ்மான் 1988ஆம் ஆண்டு போக்ராவில் BNP கட்சியின் முதன்மை உறுப்பினராக தனது சொந்த அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். 2001-2006 வரை தனது தாயார் பிரதமராக இருந்த காலத்தில் அவர் முக்கியத்துவம் பெற்றார். அந்தக் காலகட்டம் இறுதியில் அவரது வீழ்ச்சிக்கும் நாடுகடத்தலுக்கும் வழிவகுத்தது. பணமோசடி மற்றும் அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனாவைக் கொலை செய்யத் திட்டமிட்டதாகக் கூறப்படும் சதித்திட்டம் தொடர்பான குற்றச்சாட்டுகள் உட்பட பல குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றதைத் தொடர்ந்து, 2008 முதல் அவர் வங்கதேசத்தைவிட்டு வெளியேறி லண்டனில் வசித்து வந்தார். 2004 குண்டுவெடிப்புத் தாக்குதல் மற்றும் ஜியா அனாதை இல்ல அறக்கட்டளை ஊழல் வழக்கு உட்பட அனைத்து முக்கிய வழக்குகளிலும் வங்கதேசத்தின் உயர் நீதிமன்றங்கள் அவரை விடுவித்தன.

tarique rahman
மேலும், இந்தத் தீர்ப்புகள் அவர் நாடு திரும்புவதற்கான சட்டத் தடைகளையும் நீக்கின. இதைத் தொடர்ந்து 17 ஆண்டுகள் லண்டனில் தஞ்சம் அடைந்திருந்த தாரிக் ரஹ்மான், கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் தாயகம் திரும்பியிருந்தார். லண்டனில் இருந்தாலும், அவர் அங்கிருந்தபடியே கட்சியை வழிநடத்திக் கொண்டிருந்தார். BNPயின் மூத்த துணைத் தலைவராகவும், பின்னர் 2018இல் ஹசீனா காலத்தில் அவரது தாயார் சிறையில் அடைக்கப்பட்ட பிறகு செயல் தலைவராகவும் இருந்தார். மாணவர்கள் தலைமையிலான போராட்டங்களுக்குப் பிறகு ஜூலை-ஆகஸ்ட் 2024இல் ஷேக் ஹசீனாவின் வீழ்ந்தபிறகு, முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு, தாரிக் ரஹ்மானின் சட்ட மற்றும் அரசியல் மறுபிரவேசத்திற்கான கதவைத் திறந்தது. பின்னர், தாயகம் திரும்பிய பிறகு அவர், தாயாரின் மறைவுக்குப் பிறகு முறைப்படி கட்சியின் தலைவராகப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எப்படி, தனது பிரசாரத்தின்போது ‘அமெரிக்கா அமெரிக்கர்களுக்கானது’ என்ற் கொள்கையை முன்வைத்து முழங்கியதுபோல், தாரிக் ரஹ்மானும் ‘வங்கதேசமே முதலில்’ என்ற கொள்கையை முன்வைத்தார். தவிர, முகமது யூனுஸின் இடைக்கால ஆட்சியில் சிறுபான்மையினருக்கு ஏற்பட்ட வன்முறைக்கு மத்தியில், அவர்களுக்கு உரிய பாதுகாப்பு உத்தரவாதத்தையும் அளித்தார். தவிர, இந்தியாவுடன் நல்லெண்ண உறவுகளை விரும்புவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
