மூட்டு வலி, 2ஆம் வகை நீரிழிவு, நினைவாற்றல் குறைவு அல்லது இளவயது மரணம் போன்றவை நமது வயதுடன் தொடர்புடையவை. இந்த அபாயங்களை குறைக்க உதவும் மூன்று முக்கிய உடற்பயிற்சிகளைப் பற்றிப் பார்க்கலாம்.
வயதானாலும்கூட முறையான, தொடர்ச்சியான உடற்பயிற்சிகள் வாயிலாக முக்கிய உடல் உறுப்புகளை வலுவாக்குவதன் மூலம் உடல்நலத்துடன் வாழ முடியும். புஷ்-அப் செய்தல், நாற்காலியின்றி அமர்வதுபோன்ற பயிற்சி, நின்றவாறு குதிகாலை உயர்த்துதல் ஆகிய மூன்று முக்கிய உடற்பயிற்சிகள் சக்திவாய்ந்தவை ஆகும். இதுகுறித்துப் பார்க்கலாம்.

கோப்பு படம்
புஷ் அப் பயிற்சியானது கைகள், தோள்பட்டைகள் உள்ளிட்ட உடலின் மேற்பகுதி, முதுகு ஆகியவற்றுக்கு வலு ஊட்டுவதாக இருக்கும். புஷ் அப் பயிற்சி எளிமையாக அனைவரும் செய்யலாம். சமதரையில் படுக்கை வசத்தில் உள்ளங்கை தரையை தொட்டுக்கொண்டிருக்க வேண்டும். இடுப்பு, புட்டம், கால்கள் தரையை தொடாதவாறு கால்விரல்கள் மட்டும் தரையில் ஊன்றியிருக்க வேண்டும். புஷ்-அப் எடுக்கும்போது உங்களுடைய நெஞ்சு பகுதி தரையை தொட்டு எழும்படி பயிற்சி செய்ய வேண்டும்.
அடுத்ததாக நாற்காலியில் அமர்ந்து எழுவது போன்ற பயிற்சியில் உடலின் இடுப்புக்கு கீழே உள்ள பின்பகுதி, கால்கள், முழங்கால் ஆகியவை வலுப்பெறுகின்றன. இரண்டு கைகளின் விரல்களையும் கோத்து இறுக்கி பிடித்தபடி நாற்காலியில் உட்கார்ந்து எழுவதுபோல செய்ய வேண்டும். இந்த பயிற்சியை மேற்கொள்ளும்போது உங்களது பாதங்களை தோள்பட்டையின் அகலத்துக்கு ஏற்ப விரித்து வைக்க வேண்டும். தரைப்பகுதிக்கு இணையாக தொடை இருக்கும் வகையில் பாதங்கள் உங்களுடைய உடலின் கீழ்பகுதிக்கு வெளியே இருக்க வேண்டும்.

கோப்பு படம்
மூன்றாவதாக நின்றவாறு குதிகாலை உயர்த்தும் பயிற்சியில் ஒட்டுமொத்த உடலுடன் குறிப்பாக கணுக்கால் தசைகள் நெகிழ்வு பெறுகின்றன. மூட்டு, முழங்கால் ஆகியவை வலுவடைகின்றன. இந்த பயிற்சியின்போது தேவையெனில் முழங்காலை சற்றே வளைத்துக்கொள்ளலாம். கால் விரல் நுனிகளை தரையில் ஊன்றி, குதிகாலை உயர்த்தி பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
