சிவகங்கையில் செயல்பட்டுவரு ஆதரவு அறக்கட்டளையின் மின்சார இணைப்பபை மின்வாரியம் துண்டித்ததால், 50 மாணவர்கள் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது..
Summary
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கண்ணார் தெருவில் செயல்பட்டு வரும் “ஆதரவு அறக்கட்டளை”, சமூக நலப்பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

அறக்கட்டளையைச் சேர்ந்த செல்வம் என்பவர் இதை நிறுவி நடத்தி வருகிறார். இங்கு தினமும் மாலை நேரங்களில் 50க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் இலவசமாக டியூஷன் பயின்று வருகின்றனர். மேலும் ஆதரவற்ற முதியோர்களுக்கு இலவச உணவளிப்பு, பெண்களுக்கான தையல் மற்றும் பியூட்டிசியன் பயிற்சிகள் உள்ளிட்ட பல்வேறு திறன் மேம்பாட்டு திட்டங்களும் நடைபெற்று வருகின்றன.
மின் இணைப்பை துண்டித்த வாரியம்..
வாடகை வீட்டில் இயங்கும் இந்த அறக்கட்டளைக்கு கடந்த வாரம், மின்சார வாரியத்தால் வணிக இணைப்பில் மின்சாரக் கட்டணம் செலுத்தவில்லை என்ற காரணத்தால் ₹10,000 அபராதம் விதிக்கப்பட்டது. பின்னர் மின்சார இணைப்பும் துண்டிக்கப்பட்டது.
அபராதத் தொகையை கட்டுவதற்கான அவகாசம் வழங்குமாறு அறக்கட்டளை நிர்வாகி செல்வம் மின்சார வாரிய அலுவலர்களிடம் கோரிக்கை வைத்தார். ஆனால், “அபராதத் தொகையை முழுமையாக செலுத்தினால் மட்டுமே மின் இணைப்பு வழங்கப்படும்” என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனால் அறக்கட்டளையில் பயிலும் மாணவ, மாணவிகள் தற்போது மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் பாடம் படிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். “அறக்கட்டளைக்கு உடனடியாக மின்சாரம் வழங்க அரசே தலையிட வேண்டும்” என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவிக்கையில், “ஆறு மாதங்களுக்கு முன்பே அந்த அறக்கட்டளைக்கு அறிவிப்பு அனுப்பியிருந்தோம். சமூக சேவைக்கான நிறுவனம் என்றால், அதற்கான தனிப்பட்ட பட்டியலில் (Tariff Category) பதிவு செய்து அனுமதி பெற வேண்டும். ஆனால் அவர்கள் இதுவரை பதிவு செய்யாததால், விதிமுறையின்படி அபராதம் விதித்து இணைப்பு துண்டிக்கப்பட்டது” என தெரிவித்தனர்.
