கடந்த 20 போட்டிகளில் 3 அரைசதங்களை மட்டுமே அடித்திருக்கும் அபிஷேக் சர்மாவிற்கு ஏன் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்படுகிறது, இதே வாய்ப்பு ஏன் சஞ்சு சாம்சனுக்கு வழங்கப்படவில்லை என விமர்சனம் எழுந்துள்ளது.
Summary
உலகக்கோப்பையில் தொடர்நாயகனாக விளங்கி, அடுத்த 4 போட்டிகளில் மட்டுமே வாய்ப்பு பெற்ற சஞ்சு சாம்சன் திடீரென அணியிலிருந்து நீக்கப்பட்டு, புவர்ஃபார்மில் இருக்கும் அபிஷேக் சர்மாவுக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்படுவது கடும் விமர்சனத்தை கிளப்பியுள்ளது. ஹணுமா விஹாரி, ஸ்ரீகாந்த் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள், ஒரே அணியில் வீரர்களுக்கு ஏன் வேறு வேறு விதிகள் என்று கேள்வி எழுப்புகின்றனர்.
அணியில் எதாவது மாற்றம் வேணுமா உடனே சஞ்சு சாம்சனை பெஞ்ச் பண்ணுங்க என்று தான் உலகக்கோப்பை தொடரிலிருந்தே சேட்டாவை பந்தாடி வருகிறது கம்பீர் & கோ. 2026 உலகக்கோப்பை வென்ற இந்திய அணியில் அதிக ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதை வென்றிருந்த சஞ்சு சாம்சனுக்கு அடுத்த 4 போட்டிகளில் மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து டி20 தொடர்களில் கிடைத்த 4 வாய்ப்புகளில் சஞ்சு சாம்சன் அடிக்காத நிலையில் அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டு வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சஞ்சு சாம்சன்
ஆனால் அதேவேளையில் உலகக்கோப்பை தொடருக்கு முன் தொடர்ந்து 4 போட்டிகளில் டக் அவுட், உலகக்கோப்பையிலும் சுமாரான ஆட்டம் என சொதப்பிவந்த அபிஷேக் சர்மாவிற்கு மட்டும் அணியில் நிரந்த இடம் வழங்கப்பட்டு வருகிறது. சமீபத்திய ஜிம்பாப்வே தொடரில் கூட 3 போட்டிகளிலும் விளையாடிய அபிஷேக் சர்மா ஓரிலக்க ரன்களிலேயே அவுட்டாகி வெளியேறினார்.
இந்தசூழலில் தான் அபிஷேக் சர்மாவிற்கு மட்டும் ஏன் தொடர் வாய்ப்புகள் வழங்கப்படுகிறது, சஞ்சு சாம்சனுக்கு மட்டும் ஏன் இந்த தொடர் வாய்ப்புகள் கிடைக்கவில்லை என பல முன்னாள் வீரர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அபிஷேக் சர்மா குறித்து பேசியிருக்கும் ஹணுமா விஹாரி, “இங்கிலாந்து தொடரில், ஒரு அரைசதத்தைத் தவிர, வேறு எந்த குறிப்பிடத்தக்க ஆட்டத்தை அபிஷேக் சர்மா விளையாடவில்லை. கடைசி 18 போட்டிகளில் 3 அரைசதங்கள் மட்டுமே அடித்துள்ளார். உலகக் கோப்பையில் சாம்சன் எத்தனை போட்டிகளில் விளையாடினார்? மூன்று. அந்த மூன்றிலும் அரைசதம் அடித்தார். ஆனால் ஐந்து போட்டிகளில் அபிஷேக்கின் அதிகபட்ச ஸ்கோர் 16. இதைப்பற்றி ஏன் யாரும் பேசுவதில்லை? சாம்சனைப் பொறுத்தவரை, அவர் நிலையற்றவர் என்கிறார்கள். அது நியாயம்தான். ஆனால், தனக்கே உரிய நாளில், அதிக அழுத்தமுள்ள போட்டிகளில் அவரால் வெற்றிபெற முடியும்.
அபிஷேக் மீது மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது, ஆனால் சாம்சனும் அவருக்கு நிகரானவர்தான். அவரும் ஐபிஎல்-இல் சிறப்பாகச் செயல்பட்டுள்ளார். வெவ்வேறு வீரர்களுக்கு ஏன் வெவ்வேறு விதிகள்?” என கேள்வி எழுப்பி உள்ளார்.

அபிஷேக் சர்மா
அதேபோல முன்னாள் கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், “உலகக்கோப்பையில் இருந்தே அபிஷேக்கின் சர்வதேச ரன்கள் சிறப்பாக இல்லை. உலகக்கோப்பையில் தொடர் நாயகனான சாம்சனுக்கு ஏன் தொடர்ச்சியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை? ஆனால் அபிஷேக்கிற்கு மட்டும் எப்படி தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கின்றன? அபிஷேக்கிற்கு இவ்வளவு வாய்ப்புகள் வழங்கப்படும் போது, சாம்சனுக்கு ஏன் இல்லை? சஞ்சு சாம்சனை மீண்டும் அணிக்குள் எடுத்துவர வேண்டும்” என பேசியுள்ளார்.
