கச்சத்தீவு மீதான உரிமையை இலங்கைக்குக் கொடுத்து அதற்குப் பதில் இந்தியா பெற்ற வாட்ஜ் பேங்க் பகுதியின் முக்கியத்துவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கச்சத் தீவை இலங்கைக்கு கொடுத்தது தொடர்பாக கடுமையாக விவாதம் தவெக மற்றும் திமுக இடையே எழுந்தது. அப்போது பேசிய காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவர் தாரகை கத்பர்ட், ”கச்சத்தீவு 285 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலம். அதை கொடுத்துவிட்டு 25 லட்சம் ஏக்கர் கொண்ட வாட்ஜ் பேங்க் (Wadge Bank) வாங்கினோம். அதனால் எவ்வளவு வளம் கிடைக்கிறது? முதல் ஒப்பந்தத்தை மட்டும் பேசுகிறார்கள், இரண்டாவது ஒப்பந்தத்தைப் பற்றி ஏன் பேசுவதில்லை” என்று கூறினார்.

Google Earth
இந்திய பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள வாட்ஜ் பேங்க் உலகளவில் மீன்வளம் மிகுந்த 20 இடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. கன்னியாகுமரிக்கு தெற்கே சுமார் 10,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தப் பகுதி தற்போது முழுக்க முழுக்க இந்தியாவுக்கு மட்டுமே சொந்தமான பகுதியாக திகழ்ந்து வருகிறது. ஆனால், இந்திய சுதந்திரத்தின்போது இந்தப் பகுதியில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் சம அளவு உரிமைகள் இருந்தன. இதனால் இங்கு மீன்பிடிப்பது தொடர்பாக இலங்கை, இந்தியா இடையே பிரச்னைகளும் எழுந்து வந்தன.
இந்தச் சூழலில் 1974 மற்றும் 1976 ஆகிய ஆண்டுகளில் ஆண்டு இலங்கை, இந்தியா இடையே மன்னார் வளைகுடா மற்றும் வங்காள விரிகுடாவில் கடல் எல்லை தொடர்பான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் கச்சத் தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டது. அதேநேரம், அதற்குப் பதிலாக 25 லட்சம் ஏக்கர் பரப்பளவு கொண்ட வாட்ஜ் பேங்க் பகுதி மீதான அனைத்து உரிமைகளையும் இந்தியாவிடம் ஒப்படைக்க இலங்கை ஒப்புக்கொண்டது. இதன்மூலம் அதிக மீன் வளம் கொண்ட வாட்ஜ் பேங்க் பகுதியில் கடலடி கனிமங்கள், பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் கடல்வாழ் உயிரினங்களை ஆராயும் மற்றும் பயன்படுத்தும் முழு உரிமையும் இந்தியாவுக்கு கிடைத்தது.

AI
எனினும், அந்தப் பகுதியில் இலங்கை மீனவர்கள் மீன்பிடிப்பது உடனடியாக முழுமையாகத் தடை விதிக்கப்படாமல், இலங்கை மீனவர்கள் வாட்ஜ் வங்கிப் பகுதியில் மீன்பிடிப்பதைக் படிப்படியாகக் குறைத்துக்கொள்ள 3 ஆண்டுகள் அவகாசம் அளிக்க இந்திய அரசும் சம்மதித்தது. தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு பின்னர் அந்தப் பகுதி முழுவதுமாக இந்தியாவின் கட்டுப்பாட்டில் வந்தது. இந்த வாட்ஜ் பேங்க் பகுதியில் மட்டும் ஆண்டிற்குச் சராசரியாக 40,000 முதல் 50,000 மெட்ரிக் டன்கள் வரை மீன்கள் பிடிக்கப்பட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கு முக்கியப் பங்கு வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வகையில் இந்திய பொருளாதாரத்துக்கு இந்த வாட்ஜ் பேங்க் பகுதி முக்கியப் பங்கு வகித்து வருகிறது.
