திமுக எம்எல்ஏ வைத்திலிங்கத்துக்கு எதிரான ஊழல் வழக்கில் மேல் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.
2011 – 2016 வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்தவர் வைத்திலிங்கம். இவர், தனது பதவியை பயன்படுத்தி, கடந்த 2022-ம் ஆண்டு 28 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாக எழுந்த புகாரையடுத்து, 2024-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் லஞ்ச ஒழிப்புத்துறை இவர் மீது வழக்குப் பதிவு செய்தது. அதன்பின்னர் இந்த வழக்கு சென்னை அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்தது.
இதற்கிடையில், அதிமுகவில் பயணித்து வந்த வைத்திலிங்கம் இந்த ஆண்டு ஜனவரி மாதம் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். இதைத்தொடர்ந்து, அவருக்கு சட்டப்பேரவைத் தேர்தலில் ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிட சீட் வழங்கப்பட்டது.

வைத்திலிங்கம்
இதற்கிடையில், வைத்திலிங்கத்துக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு போதுமான ஆதாரங்கள் இல்லை எனக் கூறி, வழக்கை முடித்து வைத்து லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் முந்தைய ஆட்சியில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
எனினும், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்துக்கு எதிரான வழக்கை முடித்து வைத்த அறிக்கையை திரும்பப் பெறவும், வழக்கில் மேல் விசாரணை நடத்த அனுமதி கோரியும் லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்தநிலையில் தான், இந்த மனுவை விசாரித்த முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ். கார்த்திகேயன், வைத்திலிங்கம் மீதான வழக்கில் மேல் விசாரணை நடத்த அனுமதியளித்து உத்தரவிட்டார்.
அதேபோல, முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்திற்கு எதிரான ஊழல் வழக்கில், மேல் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அனுமதியளித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், விசாரணையை முடித்து மூன்று மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
