உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் 6 வெவ்வேறு தொடர்களில் கோல் அடித்த உலகின் முதல் வீரர் என்ற பிரம்மாண்ட சாதனையை ரொனால்டோ படைத்துள்ளார்.
கனடா, மெக்ஸிகோ, அமெரிக்கா ஆகிய 3 நாடுகள் இணைந்து நடத்தும் FIFA கால்பந்து உலகக்கோப்பை தொடர், ஜூன் 11ஆம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்றுவருகிறது. 48 அணிகள் பங்கேற்றுள்ள இந்தத் தொடரில், நாளுக்குநாள் பல்வேறு சுவாரஸ்யங்கள் அரங்கேறி வருகின்றன. இந்த நிலையில், நேற்று நடைபெற்ற போட்டி ஒன்றில், உஸ்பெகிஸ்தானை, 5-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி போர்ச்சுகல் அணி அபார வெற்றி பெற்றது. அமெரிக்காவின் ஹூஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், போர்ச்சுகல் அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆட்டத்தின் 6 மற்றும் 39ஆவது நிமிடங்களில் இரண்டு கோல்களை அடித்து அசத்தினார்.

ரொனால்டோ
அணியின் மற்ற கோல்களை நுனோ மென்டிஸும், ரஃபேல் லியாவோவும், நுமடோவ் ஆகியோரும் அடித்தனர். இந்தப் போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ 2 கோல்களை அடித்ததன்மூலம் புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்தார். உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் 6 வெவ்வேறு தொடர்களில் கோல் அடித்த உலகின் முதல் வீரர் என்ற பிரம்மாண்ட சாதனையை அவர் படைத்துள்ளார்.
2006-ஆம் ஆண்டு தனது முதல் உலகக் கோப்பை தொடரில் விளையாடி வரும் ரொனால்டோ, அன்றுமுதல் தற்போதுவரை தாம் பங்கேற்ற அனைத்து உலகக் கோப்பை தொடர்களிலும் தொடர்ந்து கோல் அடித்து வரும் வீரரானார்.

மெஸ்ஸி, ரொனால்டோ
அவர் 2006 (ஜெர்மனி – 1 கோல்), 2010 (தென்னாப்பிரிக்கா -1 கோல்), 2014 (பிரேசில் – 1 கோல்), 2018 (ரஷ்யா – 4 கோல்கள் – ஸ்பெயின் அணிக்கு எதிரான ஹாட்ரிக் உட்பட), 2022 (கத்தார் – 1 கோல்), 2026 (உஸ்பெகிஸ்தான் – 2 கோல்கள்) உள்ளிட்ட அணிகளுக்கு எதிராக கோல் அடித்துள்ளார். மேலும் ,உஸ்பெகிஸ்தான் அணிக்கு எதிராக கோல் அடித்தபோது ரொனால்டோவின் வயது 41 ஆண்டுகள் 138 நாட்கள் ஆகும். இதன்மூலம் உலகக் கோப்பை வரலாற்றில் கோல் அடித்த இரண்டாவது மிக வயதான வீரர் என்ற பெருமையைப் பெற்றார். முதலிடத்தில் 42 வயதுடன் ரோஜர் மில்லா உள்ளார். அதேநேரத்தில், லியோனல் மெஸ்ஸியும் ரொனால்டோவும் 6 உலகக் கோப்பை தொடர்களில் விளையாடிய முதல் வீரர்கள் என்ற பெருமையைப் பகிர்ந்துகொண்டாலும், விளையாடிய 6 தொடர்களிலும் கோல் அடித்த ஒரே வீரர் என்ற தனித்துவமான சாதனைக்கு ரொனால்டோ மட்டுமே சொந்தக்காரராக உள்ளார். மெஸ்ஸி 2010 தொடரில் கோல் அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
