ஐரோப்பாவில் தடை செய்யப்பட்ட நச்சு பூச்சிக்கொல்லிகள் இந்திய வயல்களில் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருவதால், புற்றுநோய் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் தடை செய்யப்பட்ட, புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய ஆபத்தான பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் நச்சு ரசாயனங்கள், இந்திய விவசாயத்தில் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருவது உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2024 மே மாதம் முதல் 2026 மே மாதம் வரையிலான இரண்டு ஆண்டுகளில் மட்டும், பூச்சிக்கொல்லி ரசாயனங்களின் தாக்கம் அதிகமாக இருந்ததாகக் கூறி, 365 இந்திய உணவுப் பொருட்களை ஐரோப்பிய ஒன்றியம் திருப்பி அனுப்பி நிராகரித்துள்ளது. உலக சுகாதார அமைப்பால், ‘புற்றுநோய் காரணி’ என்று எச்சரிக்கப்பட்ட ‘கிளைஃபோசேட்’ (Glyphosate), 70-க்கும் மேற்பட்ட நாடுகளில் தடை செய்யப்பட்ட ‘பாராக்குவாட்’ (Paraquat) மற்றும் டிஎன்ஏவை (DNA) சிதைக்கக்கூடிய ‘டைமெத்தோயேட்’ (Dimethoate) போன்ற ஆபத்தான களைக்கொல்லிகளும் பூச்சிக்கொல்லிகளும் இந்திய விவசாய நிலங்களில் தாராளமாகப் பயன்படுத்தப்படுகின்றன.

Banned Pesticides Still Being Used in India.
வெளிநாடுகளில் தடை செய்யப்பட்டபோதிலும், இந்தியாவில் கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபத்துக்காகவும், கொள்கை முடிவுகளில் உள்ள தொய்வாலும் இந்த நச்சுகள் இன்னும் சட்டப்பூர்வமாக விற்கப்பட்டு வருகின்றன. இது விவசாய நிலங்களை மட்டுமன்றி, உணவு வழியாக மனித உடல்களையும், தேனீக்கள் போன்ற சுற்றுச்சூழலுக்கு அவசியமான உயிரினங்களையும் கடுமையாகப் பாதித்து வருகிறது. நமது தட்டுக்கு வரும் உணவிலேயே நச்சு கலந்திருக்கும் இந்த அவலநிலை குறித்து, அரசு மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை சமூக ஆர்வலர்களிடையே வலுத்துள்ளது.
