திரிணாமுல் காங்கிரஸ் கோட்டை தகர்க்கப்பட்டு, முதன்முறையாக பாஜக ஆட்சியைப் பிடித்தது. அதேநேரத்தில், தேர்தல் தோல்வி காரணமாக திரிணாமுல் காங்கிரஸின் மூத்த உறுப்பினர்கள் பலரும் கட்சி மீதும் தலைமை மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றனர்.
ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய, மேற்குவங்க தாரகேஸ்வர் நகராட்சி முன்னாள் தலைவரும், திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவருமான சபன் சமந்தாவை பொதுமக்கள் செருப்பு மாலை அணிவித்து வீதியில் ஊர்வலமாக அழைத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் பலத்த தோல்வியடைந்தது. மேலும், தாம் போட்டியிட்ட தொகுதியிலேயே அக்கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான மம்தா பானர்ஜியே தோல்வியடைந்தார். இதையடுத்து திரிணாமுல் காங்கிரஸ் கோட்டை தகர்க்கப்பட்டு, முதன்முறையாக பாஜக ஆட்சியைப் பிடித்தது. அதேநேரத்தில், தேர்தல் தோல்வி காரணமாக திரிணாமுல் காங்கிரஸின் மூத்த உறுப்பினர்கள் பலரும் கட்சி மீதும் தலைமை மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றனர். தவிர, கட்சிப் பதவிகளிலிருந்தும் வெளியேறி வருகின்றனர். இதனால் திரிணாமுல் காங்கிரஸ் இரண்டாகப் பிளவுபட்டது. குறிப்பாக, அக்கட்சியின் 61 எம்எல்ஏக்கள் மம்தாவுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கினர். தவிர, அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ரிதாபிரதா, 61 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் எதிர்க்கட்சித் தலைவராகி இருக்கிறார். இன்னொரு புறம் அவர் கட்சியைச் சேர்ந்த எம்பிக்களில் 28 பேரில் 20 பேரும் மம்தாவுக்கு எதிராக திரும்பியுள்ளனர்.
இந்த நிலையில், ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய, மேற்குவங்க தாரகேஸ்வர் நகராட்சி முன்னாள் தலைவரும், திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவருமான சபன் சமந்தாவை பொதுமக்கள் செருப்பு மாலை அணிவித்து வீதியில் ஊர்வலமாக அழைத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாரகேஸ்வர் நகராட்சியின் 8-வது வார்டு கவுன்சிலராக இருக்கும் சபன் சமந்தா மீது உள்ளூர் பொதுமக்கள் தரப்பில் கடுமையான ஊழல், நில அபகரிப்பு, நிலக்கரி திருட்டு மற்றும் மாடு கடத்தல் போன்ற புகார்கள் சுமத்தப்பட்டுள்ளன. அவர் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறி அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக அதிருப்தியில் இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த 22ஆம் தேதி, தாரகேஸ்வர் பகுதியின் பத்மபுகூர்/சாரதாபள்ளி பகுதிக்கு சபன் சமந்தா சென்றபோது, அங்கு கூடியிருந்த கோபமடைந்த பொதுமக்கள் அவரைச் சூழ்ந்துகொண்டனர்.

மம்தா பானர்ஜி
மேலும், அவர் மீது முட்டை, தக்காளி வீசியதோடு, காதைப் பிடித்துத் தோப்புக்கரணம் போடவும் வைத்தனர். உட்கட்சிக் குழப்பத்தில் இருக்கும் திரிணமூல் காங்கிரஸுக்கு இச்சம்பவம் மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து ஹூக்ளி மாவட்ட காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இத்தாக்குதலின் பின்னணியில் எதிர்க்கட்சியான பாஜக இருப்பதாக திரிணமூல் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. ஆனால், பாஜக தரப்போ, “நாங்கள் இந்த வன்முறையை ஆதரிக்கவில்லை; அதே நேரத்தில் திரிணமூல் காங்கிரஸ் தலைவர்களின் தொடர் ஊழல்களால் பொதுமக்கள் விரக்தியின் எல்லைக்கே சென்றுவிட்டனர்” எனத் தெரிவித்துள்ளது.
