இந்தியாவில் குழந்தைகளிடையே கிட்டப்பார்வை வேகமாக அதிகரிப்பதை முன்னிட்டு, அகில இந்திய கண் மருத்துவ சங்கம் புதிய வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது.
உலக கிட்டப்பார்வை வாரத்தை முன்னிட்டு, அகில இந்திய கண் மருத்துவ சங்கம் குழந்தைகளுக்கான புதிய கண் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் குழந்தைகளிடையே கிட்டப்பார்வை பாதிப்பு வேகமாக அதிகரித்துவரும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நகர்ப்புறங்களில் 14 சதவீதக் குழந்தைகளும், கிராமப்புறங்களில் சுமார் 6.8 சதவீதக் குழந்தைகளும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதைத் தடுக்க, தினமும் 2 மணி நேரம் வெளியில் விளையாடுவது, ஆண்டுக்கு ஒருமுறை கண் பரிசோதனை மற்றும் ’20-20-20′ விதியைப் பின்பற்றுவது அவசியம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
அதாவது, 20 நிமிடங்களுக்கு ஒருமுறை, 20 வினாடிகள், 20 அடி தூரத்திலுள்ள பொருளைப் பார்க்க வேண்டும் என்பதுதான் இந்த விதி. கைபேசி திரை நேரத்தைக் குறைத்து, ஆரம்பத்திலேயே கண்டறிவதன் மூலம் எதிர்கால கண் பார்வையின்மையைத் தடுக்க முடியும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
