காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல் என எல்லோரும் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்ற எங்கள் விருப்பத்தை தெரிவித்திருக்கிறோம். உடனடியாக கலந்தாலோசித்து முடிவு சொல்வதாக கூறி இருக்கிறார்கள் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்திருக்கிறார்.
தமிழக சட்டபேரவைத் தேர்தலில் 108 இடங்களில் கட்சி ஆரம்பித்து இரண்டே ஆண்டுகளான தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும்பான்மையாக வென்றிருந்தாலும், ஆட்சிமையக்க போதிய பெரும்பான்மை கிடைக்காத நிலையில், காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் மற்றும் ஐயூஎம்எல் ஆதரவுடன் ஆட்சியமைத்திருக்கிறது. அக்கட்சின் தலைவர் விஜய் மே 10-ம் தேதி தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றிருக்கிறார், அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்றிருக்கின்றன.

விஜய்
இந்தசூழலில் தான், முழுமையான அமைச்சரவை எப்போது அமைக்கப்படும் என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வரும் நிலையில், தவெக அமைச்சரவை விரிவாக்கம் இந்த வாரத்திற்குள் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, காங்கிரஸ் கட்சி தேர்தலுக்குப் பின் தவெகவுடன் கூட்டணி அமைத்துள்ள நிலையில், அக்கட்சியில் இருந்து 2 பேர் அமைச்சரவையில் இடம்பெறுவார்கள் எனத் தெரிகிறது. எனினும், விசிக, இடதுசாரிகள் மற்றும் ஐயூஎம்எல் கட்சிகள் தங்களுக்கு அமைச்சரவையில் இடம் வேண்டாம் எனவும் தவெகவுக்கு வெளியில் இருந்து மட்டுமே ஆதரவு எனவே தெரிவித்திருந்தன.
எனினும், சமீபத்தில் விசிக தலைவர் திருமாவளவன் தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில், தனது கட்சியின் நிர்வாகிகள் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என வலியுறுத்தி வருவதாக தெரிவித்திருந்தார். இந்தசூழலில் தான், அமைச்சரவை விரிவாக்கத்தின் போது விசிக அமைச்சரவையில் இடம்பெறுமா? என கேள்வி எழுந்திருக்கிறது.
இந்த நிலையில், அயோத்திதாச பண்டிதரின் பிறந்த நாளையொட்டி கிண்டியில் உள்ள அவரின் உருவ சிலைக்கு மாலையணிவித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
ஆதவ் அர்ஜுனா பேசுகையில், ”காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல் என எல்லோரும் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்ற எங்கள் விருப்பத்தை தெரிவித்திருக்கிறோம். உடனடியாக கலந்தாலோசித்து முடிவு சொல்வதாக சொல்லி இருக்கிறார்கள்; நல்ல செய்தி வரும் என நினைக்கிறோம் எனத் தெரிவித்திருக்கிறோம். விரைவில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும்” எனத் தெரிவித்திருக்கிறார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், தேர்தலில் தோல்வியை தழுவிய பிறகு நல்ல எதிர்க்கட்சியாக எடப்பாடி பழனிசாமி செயல்பட்டிருக்க வேண்டும். பின்வாசல் வழியாக ஆட்சி அமைக்க நினைத்தார் எடப்பாடி கே.பழனிசாமி; மக்களின் தீர்ப்புக்கு எதிராக செயல்பட நினைத்தார். திமுக தனது கொள்கைகளை மறந்து அதிமுகவுக்கு ஆதரவளிக்க முயற்சித்தது.திமுகவுடன் கே.பழனிசாமி கைகோக்க நினைத்ததை தற்கொலைக்கு சமம் என அதிமுகவினர் கருதினர் என விமர்சித்துள்ளார்.
