மக்கள் விநாயகருக்கு தேங்காய் உடைப்பதுபோல 108 கொடுத்திருக்கிறார்கள். அதனை வேறு 108 ஆக மாற்றப் பார்க்காதீர்கள்.
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. இன்னும் தேவைப்படும் பெரும்பான்மைக்காக முயற்சிகளை எடுத்து வருகிறார் விஜய். அவர் ஆட்சியமைக்க பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கூறியுள்ளார். இந்நிலையில் விஜய்க்கு ஆதரவாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகர் மன்சூர் அலிகான்.

Vijay
அந்த வீடியோவில், “என்ன இது அநியாயம் செய்கிறார்களே? வேகமாக விஜயை கூப்பிட்டு CM ஆக உட்கார வையுங்கள். ஆட்டுக்குத் தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் தேவை இல்லாதது என்பதுபோல, எந்த கவர்னர் வந்தாலும் இதைத்தான் செய்கிறார்கள். இனிமேல் நீதிபதிகளை வைத்துதான் பதவிப்பிரமாணம் செய்ய வேண்டும். நிச்சயதார்த்தம் முடிந்து ஒன்றரை வருடம் கழித்து திருமணம் செய்வதுபோல, இப்போதே 108 வாங்கி வந்து ஒரு வாரம் ஆகப் போகிறது. மக்கள் விநாயகருக்கு தேங்காய் உடைப்பதுபோல 108 கொடுத்திருக்கிறார்கள். அதனை வேறு 108 ஆக மாற்ற பார்க்காதீர்கள்.
விஜயை இப்படியே செய்தீர்கள் என்றால், பரோட்டா சூரி காமெடி போல எல்லா கோட்டையும் அழித்துவிட்டுட்டு முதலில் இருந்து தேர்தல் என்றால் டாப்பா டான்ஸ் ஆடிவிடும். எந்தக் கட்சியாலும் செலவும் செய்ய முடியாது. பத்து பைசா செலவு செய்யாமல் இப்படி ஜெயித்தும் மத்திய அரசு ஏன் இந்த வேலையைச் செய்கிறது. இது ரொம்ப தவறானது.

மன்சூர் அலிகான்
வடமாநிலங்களில் 50, 60 ஜெயித்தவர்களை எல்லாம் முதல்வர் ஆக்கி, கோடிக்கணக்கில் பணம் வாங்கி ஆட்சி அமைத்தார்கள். இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். அப்படி இருக்க சட்டப்படி, நீங்கள் நடக்க வேண்டும். இங்கு எந்த வேலையும் நடக்க மாட்டேன் என்கிறது. நாட்டில் கலகம் உண்டாக்காமல், விஜயை அழைத்து முதல்வர் ஆக்கும் வழியை ஆளுநர் பாருங்கள்.” என்று கூறியுள்ளார் மன்சூர் அலிகான்.
