
தெருநாய் பிரச்சனை குறித்து நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். தெருநாய் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது மிகவும் எளிதானது என்று கூறிய அவர், எல்லா உயிர்களையும் காப்பாற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
கடந்த ஒரு வாரமாக தெருநாய் விவகாரம் இந்தியா முழுவதும் பேசுபொருளாகி இருக்கிறது. குறிப்பாக நீயா, நானா நிகழ்ச்சியில் தெருநாய் விவகாரம் குறித்து விவாதம் நடந்தது. அதன்பின் தெருநாய்களுக்கு ஆதரவாக பேச வந்தவர்களை சோசியல் மீடியாவில் கிண்டல் செய்ய தொடங்கினர். இதற்காக துணை நடிகை அம்மு, படவா கோபி உள்ளிட்டோர் விளக்கமும் அளித்தனர்.
இதன்பின் தொடர்ச்சியாக தெருநாய்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து சோசியல் மீடியாவிலும், மக்கள் மத்தியிலும் விவாதங்கள் நடந்து வருகின்றன. தெருநாய்களால் ஏற்படும் ரேபீஸ் நோய் குறித்த விவாதங்களும் அதிகமாகி இருக்கின்றன. இதனிடையே தமிழ்நாட்டில் தெருநாய் பிரச்சனை அதிகரித்துள்ள நிலையில், திருவண்ணாமலையில் தெருநாய் குறுக்கே வந்ததால் விபத்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்தார்.
இதனால் தெருநாய்களை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல்கள் அதிகரித்துள்ளன. அதேபோல் தெருநாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி போட வேண்டும் என்றும் கோரிக்கைகள் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் தெருநாய் பிரச்சனை குறித்து நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கமல்ஹாசன் பேசுகையில், தெருநாய்கள் பிரச்சனைக்கு தீர்வு மிகவும் எளிதானது. விஷயம் தெரிந்தவர்கள், உலக சரித்திரம் தெரிந்தவர்கள், சமூக சுகாதாரம் தெரிந்தவர்கள்.. கழுதை காணாமல் போனது குறித்து கவலைப்படுகிறார்களா? கழுதை எல்லாம் காணாமல் போய்விட்டதே.. நமக்காக எவ்வளவு பொதி சுமந்துள்ளது.. இப்போது பார்க்கிறதே இல்லையே..
கழுதையை யாராவது காப்பாற்ற வேண்டும் என்று பேசுகிறார்களா.. எல்லா உயிர்களையும் காப்பாற்ற வேண்டும்.. எவ்வளவு முடியுமோ காப்பாற்ற வேண்டும்.. அவ்வளவுதான் என்னுடைய கருத்து என்று தெரிவித்துள்ளார். கமல்ஹாசனின் கருத்து விலங்கு நல ஆர்வலர்களுக்கு கொடுக்கப்பட்ட பதிலாக பார்க்கப்படுகிறது. நாய்கள் குறித்து மட்டுமல்லாமல் அனைத்து விலங்குகள் குறித்து சிந்தியுங்கள் என்றும் சொல்வதாக பார்க்கப்படுகிறது.