தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அருகிலுள்ள தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து மோன்தா (Montha) புயல் உருவாகியுள்ளது.
மோன்தா புயல் தாக்கத்தால், அடுத்த சில மணி நேரங்களில் தமிழ்நாட்டின் பல கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அரியலூர், செங்கல்பட்டு, சென்னை, கடலூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகை, ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருவாரூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம் என கூறப்பட்டுள்ளது.

புயல்
வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள மோன்தா புயல் நாளை ஆந்திராவின் காக்கிநாடா அருகே கரையை கடக்கவுள்ளது. புயல் எச்சரிக்கை காரணமாக, மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது; கடலில் உள்ளவர்கள் உடனே கரைக்குத் திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆந்திரா மற்றும் ஒடிசாவில் சில மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புயலால் தமிழ்நாடு, ஒடிசா, ஆந்திர கடலோரப் பகுதிகளில் கனமழை எதிர்பார்க்கப்படுகிறது.
