
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலி, தவெக தலைவர் Vijay மீது வழக்கு, Chennai உயர்நீதிமன்றம் விசாரணை, Durai Murugan கைது செய்யும் சூழல் வந்தால் நடவடிக்கை என அறிவிப்பு.

விஜய் – துரைமுருகன்
கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் தவெக தலைவர் விஜய்யை கைது செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டால், கைது செய்வோம் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
கரூரில் தவெக தலைவர் விஜய், கடந்த 27ஆம் தேதி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி மொத்தம் 41 பேர் பலியாகினர். இந்த விவகாரத்தில் தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த், இணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார் உள்ளிட்டோர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் தவெக தலைவர் விஜய் மற்றும் அவரது கட்சியினர் மீது சென்னை உயர்நீதிமன்றம் சரமாரியான கேள்விகளை எழுப்பியது. கூட்ட நெரிசல் சம்பவத்துக்குப் பிறகு விஜய் கரூர் செல்லாததும் கடும் விமர்சனத்தை எழுப்பியது.
இந்நிலையில், கரூர் கூட்ட நெரிசல் குறித்து, சென்னை வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, சிறப்பு புலனாய்வு குழுவிடம் விசாரணை ஆவணங்களை ஒப்படைக்கும் பணி தொடங்கியுள்ளது. கரூர் நகர காவல் நிலையத்தில் இருந்த விசாரணை ஆவணங்களை, காவல் ஆய்வாளர் தனியார் காரில் சென்னைக்கு கொண்டு வருகிறார். சென்னையில் ஐ.ஜி., அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவிடம் இந்த ஆவணங்கள் ஒப்படைக்கப்பட உள்ளன.
அதேபோல், விஜய்யின் பரப்புரை வாகனத்தை பறிமுதல் செய்ய நாமக்கல் மாவட்ட காவலர்கள் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. விஜய்யின் பரப்புரை பேருந்தை ஏன் பறிமுதல் செய்யக்கூடாது என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருந்தது. இந்நிலையில், 2 மணிநேர வீடியோ காட்சிகள், 30-க்கும் மேற்பட்ட செல்போன்களில் பதிவான வீடியோக்களை ஆய்வு செய்த நாமக்கல் காவலர்கள், விஜய்யின் பரப்புரை வாகனத்தை பறிமுதல் செய்ய முடிவு எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த நடவடிக்கைகளுக்கு மத்தியில் வேலூர் மாவட்டம் காட்பாடியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், விஜய்க்கு தலைமைப் பண்பு இல்லை என்று நீதிபதி கூறியது உண்மை தான் என்றும் தெரிவித்தார். விஜய்யை கைது செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டால், கைது செய்வோம். ஆனால் தேவையில்லாமல் யாரையும் கைது செய்ய மாட்டோம் என்றும் அமைச்சர் துரைமுருகன் பேசியிருக்கிறார்.