நீரிழிவு நோய் ஆண்களை காட்டிலும் பெண்களையே உடலியல் ரீதியாக அதிகம் பாதிப்பை உண்டாக்குவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
Summary
நீரிழிவு நோய் பெண்களுக்கு ஆண்களை விட பல மடங்கு தீவிரமாகப் பாதிக்கிறது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்டிரோன் ஹார்மோன் மாற்றங்கள், மாதவிடாய் சுழற்சி, கர்ப்பகால நீரிழிவு, பி.சி.ஓ.டி போன்ற காரணங்கள் இன்சுலின் எதிர்ப்பை அதிகரித்து டைப்-2 நீரிழிவு அபாயத்தை உயர்த்துகின்றன. இதனால் பெண்களுக்கு இதய நோய், மனநலப் பிரச்சனைகள் அதிகரிக்கும் நிலையில், உடற்பயிற்சி, நார்ச்சத்து உணவு, எடை கட்டுப்பாடு, சர்க்கரை பரிசோதனை அவசியம் என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
நீரிழிவு என்பது ஒரு பொதுவான நோயாகக் கருதப்பட்டாலும், அது ஆண்கள் மற்றும் பெண்களின் உடலில் ஏற்படுத்தும் தாக்கங்கள் முற்றிலும் வேறுபட்டவை என மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
பெண்களின் உடலில் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டிரோன் போன்ற ஹார்மோன் மாற்றங்கள் தொடர்ச்சியாக ஏற்படுகின்றன. மாதவிடாய் சுழற்சியின் இரண்டாம் பாதி, கர்ப்பக்காலத்தில் ஏற்படும் இந்த ஹார்மோன் மாற்றங்கள் செல்களின் இன்சுலின் ஏற்கும் திறனைக் குறைத்து, இன்சுலின் எதிர்ப்பை அதிகரிக்கின்றன.

நீரிழிவு நோய்
குறிப்பாக, இளம்பெண்களிடையே பரவலாகக் காணப்படும் பி.சி.ஓ.டி எனப்படும் நீர்க்கட்டிப் பிரச்சனை, டைப்- 2 நீரிழிவு நோய் வருவதற்கான அபாயத்தைப் பல மடங்கு உயர்த்துகிறது. கர்ப்பகால நீரிழிவு, பிரசவத்திற்குப் பிறகு சரியாகிவிட்டாலும், பிற்காலத்தில் தாய் மற்றும் குழந்தை இருவருக்குமே நிரந்தர சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பை உருவாக்குகிறது.
மேலும் ஈஸ்ட்ரோஜன் அளவு திடீரெனக் குறைவது கொழுப்புச் சேர்க்கைக்கும் ரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாடற்று உயர்வதற்கும் வழிவகுக்கிறது. இது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இதயக் கோளாறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பை ஆண்களை காட்டிலும் இரண்டு முதல் நான்கு மடங்கு வரை அதிகரிக்கச் செய்வதாக இதய நோய் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

diabetes alternative foods
போதிய உடற்பயிற்சியின்மை மற்றும் தூக்கமின்மை காரணமாக ஏற்படும் நாள்பட்ட மன அழுத்தம், கார்டிசோல் போன்ற ஸ்ட்ரெஸ் ஹார்மோன்களைச் சுரக்கச் செய்து ரத்த சர்க்கரை அளவை உயர்த்துகிறது. எனவே, பெண்கள் தங்கள் உடல் எடையைச் சீராகப் பராமரித்து, நார்ச்சத்து நிறைந்த சரிவிகித உணவு முறை, தினசரி உடற்பயிற்சி மற்றும் தொடர்ச்சியான சர்க்கரை அளவு பரிசோதனை மேற்கொள்வது அவசியம் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
