இந்தப் படத்துக்காக இயக்குநர் நிறைய ஆராய்ச்சிகள் செய்திருக்கிறார். அதை எங்களுக்கும் படிக்க கொடுத்தார்.
நடிகை காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி இந்தியா ஸ்டோரி’ திரைப்படம், உணவு கலப்படங்கள் பற்றிய விஷயங்களைப் பேசும் உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கிறது. இப்படம் ஜூலை 24ம் தேதி ரிலீஸ் ஆக்கவுள்ள நிலையில், படம் பற்றிய பேட்டி ஒன்றில் இத்திரைப்படத்தின் கதையைக் கேட்டபோது அது தன்னை எந்த அளவிற்கு பாதித்தது என்பது குறித்து காஜல் அகர்வால் சமீபத்திய பேட்டியில் பகிர்ந்திருக்கிறார்.
இது குறித்து அவர், “இந்தப் படத்துக்காக இயக்குநர் நிறைய ஆராய்ச்சிகள் செய்திருக்கிறார். அதை எங்களுக்கும் படிக்க கொடுத்தார். பூச்சி கொல்லிகள், உரங்கள் அவற்றின் வகைகள் என பலவும் அதில் கூறப்பட்டது. இது என்னை முற்றிலுமாக மாற்றிவிட்டது. என்னுடைய குடும்பத்துக்காக நான் வாங்கும் பலசரக்கு பொருட்களை கவனிக்க வைத்திருக்கிறது.
இயற்கையானது என்ற பெயரில் விற்கப்படும் பொருட்கள் நிஜமாகவே இயற்கையானதா? அவற்றில் விலை அதிகம் எனவே நல்லது என நம்புகிறோமா? இப்படி இதற்கு முன் நான் சிந்திக்காத பல விஷயங்கள் குறித்து இப்போது சிந்திக்க துவங்கி இருக்கிறேன். இதற்கு என்னால் தீர்வு சொல்வது இயலாத காரியம். ஆனால் இது குறித்த உரையாடல்களை துவங்குவது அவசியம் என நினைக்கிறேன். விவசாயிகளுக்கு உதவியாக அரசாங்கமும் செயல்பட வேண்டும்.” எனக் கூறியிருக்கிறார்.
