இத்தாலி நாட்டின் பிரபல ஸ்போர்ட்ஸ் கார் தயாரிப்பு நிறுவனமான லம்போர்கினி உலகின் மிக அதிவேகமான மற்றும் சக்திவாய்ந்த சூப்பர் எஸ்யுவி மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது.
இத்தாலி நாட்டின் பிரபல ஸ்போர்ட்ஸ் கார் தயாரிப்பு நிறுவனமான லம்போர்கினி (Lamborghini), உலகின் மிக அதிவேகமான மற்றும் சக்திவாய்ந்த சூப்பர் எஸ்யுவி (Super SUV) காரான ‘லம்போர்கினி உருஸ் எஸ்இ பெர்ஃபார்மண்டே’ (Urus SE Performant) மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது, சொகுசு எஸ்யுவி கார் சந்தையில் தற்போதுள்ள ஃபெராரி, ஆஸ்டன் மார்ட்டின், போர்ஷ் ஆகிய கார்களைவிட வேகமாகச் செல்லும் காரை லம்போர்கினி களமிறக்கியுள்ளது. லம்போர்கினி நிறுவனம் சுற்றுச்சூழல் விதிகளுக்கு ஏற்ப கார்பன் உமிழ்வைக் குறைக்கவும், அதே சமயம் அதன் பாரம்பரிய ரேசிங் வேகத்தை எவ்விதத்திலும் விட்டுக் கொடுக்காமலும் இந்த புதிய காரை வடிவமைத்துள்ளது.

இந்த காரின் வேகம் மணிக்கு 312 கிலோ மீட்டர் எனக் கூறப்படுகிறது. மேலும் இது, வெறும் 3.3 வினாடிகளில் 0 முதல் 100 கி.மீ வேகத்தையும்,10.8 வினாடிகளில் 200 கி.மீ வேகத்தைத் தொடும் ஆற்றல் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் உலகின் அதிவேகமான சூப்பர் எஸ்யுவி என்ற பெருமையை இந்த கார் பெற்றுள்ளது. இதில் சக்திவாய்ந்த 4.0-லிட்டர் ட்வின்-டர்போ V8 என்ஜின் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் இணைந்து பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், வழக்கமான உருஸ் எஸ்இ மாடலைவிட இது 32 கிலோ குறைவான எடை கொண்டது. காரின் பம்பர், ரூஃப், போனெட் மற்றும் வீல் ஆர்ச்கள் போன்றவற்றில் அதிகளவில் கார்பன் ஃபைபர் பயன்படுத்தப்பட்டதே இதற்கு காரணமாகும். இதில் புதிய ‘அவுரா’ (AURA) டூயல்-சேம்பர் ஏர் சஸ்பென்ஷன் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது.
இது, வேகமாக வளைவுகளில் திரும்பும்போது காரின் பாடி ரோலிங் தன்மையை 55% வரை குறைத்து நிலைத்தன்மையை மேம்படுத்துகிறது. தவிர, ஏற்கெனவே இருக்கும் ஸ்ட்ராடா, ஸ்போர்ட், கோர்சா மோடுகளுடன் சேர்த்து, கரடுமுரடான மற்றும் மணல் பரப்புகளில் அசாத்தியமாக ஓட்டுவதற்காக ‘ராலி’ (Rally) மோடு இதில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. இதன்விலை சுமார் 4 கோடியே 85 லட்சம் ரூபாய் ஆகும். இன்னும் சில மாதங்களில் இந்த கார் இந்தியாவிலும் கிடைக்கும் எனக்கூறப்படுகிறது.
