பசி எடுக்கும்போது அதிகரிக்கும் கற்பனைத் திறன், டயட் கட்டுப்பாட்டை எப்படி சிதைக்கிறது என்பது குறித்து ஒடாகோ பல்கலைக்கழகத்தின் புதிய ஆய்வு வெளியாகி உள்ளது.
பசி நேரங்களில் நமது தவறான உணவுத் தேர்வுகள் குறித்த சுவாரஸ்யமான ஆய்வு முடிவு ஒன்று வெளியாகியுள்ளது. பசியோடு இருக்கும்போது பல்பொருள் அங்காடிகளுக்குச் சென்றால், தேவையில்லாத கொழுப்பு மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகளை நாம் அதிகம் வாங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளோம்.

food
இதற்கு நமது கண்கள் மட்டுமே காரணமல்ல, நமது மூளையின் கற்பனைத் திறனும் முக்கியக் காரணம் என்று நியூசிலாந்தின் ஒடாகோ (Otago) பல்கலைக்கழக ஆய்வு தெரிவிக்கிறது. நாம் பசியாக இருக்கும்போது, உணவின் சுவையையும் அதன் மணத்தையும் கற்பனை செய்து பார்க்கும் திறன் நமது மூளைக்கு வழக்கத்தைவிட பல மடங்கு அதிகரிக்கிறது. இந்த அதீத கற்பனைத் திறன், அந்த உணவை உடனே சாப்பிட வேண்டும் என்ற தூண்டுதலைத் தீவிரமாக்குகிறது.
இதனால்தான் கடுமையான டயட் இருப்பவர்களால்கூட பசி எடுக்கும்போது தங்களது கட்டுப்பாட்டைத் தக்கவைக்க முடிவதில்லை. அதேநேரத்தில், ஓர் உணவை நாம் சாப்பிடாமல் மீண்டும் மீண்டும் மனதுக்குள் கற்பனை மட்டுமே செய்துகொண்டிருந்தால், காலப்போக்கில் அந்த உணவின் மீதான ஈர்ப்பு குறைவதையும் இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது.

food
சுற்றியுள்ள விளம்பரங்களும் பசியும் இணைந்து நம்மை எப்படிச் சிந்திக்க வைக்கின்றன என்பதைப் புரிந்துகொள்வதன் மூலம், தவறான உணவுப் பழக்கவழக்கங்களில் இருந்து நாம் தப்பிக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
