தெருநாய்கள் தொல்லை நாளுக்குநாள் பெரும் தொல்லையாக மாறிவரும் நிலையில், இவ்விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் சுற்றித்திரியும் தெருநாய்களை அப்புறப்படுத்துவது குறித்து 4 வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.முன்னதாக, உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின்போது, தமிழ்நாட்டில் 2026ஆம் ஆண்டின் முதல் 4 மாதங்களிலேயே 2 லட்சத்து 63 ஆயிரம் பேர் தெருநாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 17 பேர் உயிரிழந்துள்ளதாகவும் வெளியான செய்திகள் சுட்டிக்காட்டப்பட்டன.

தெருநாய்கள்
தெருநாய்கள் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் 2025இல் பிறப்பித்த உத்தரவை மாநில அரசுகள் முறையாக அமல்படுத்துவதை உறுதிசெய்ய மாநிலஉயர் நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்ற அமர்வு அறிவுறுத்தியது.
பொது இடங்களில் பிடிக்கப்படும் நாய்களை மீண்டும் அங்கேயே விடாமல் பராமரிப்பு மையங்களுக்கு அனுப்பவும், அனைத்து மாவட்டங்களிலும் போதிய தடுப்பூசி மற்றும் இனப்பெருக்கக் கட்டுப்பாட்டு மையங்களை ஏற்படுத்திக் கால்நடை மருத்துவர்களை நியமிக்கவும் கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

சென்னை உயர்நீதிமன்றம்
எனவே, தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் தெருநாய்கள் தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவுகள் அமல்படுத்தப்படுவதை உறுதிசெய்ய சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு தாமாக முன்வந்து இந்த வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது. பள்ளி, கல்லூரிகள் போன்ற கல்வி நிறுவனங்களில் சுற்றித்திரியும் நாய்களை அப்புறப்படுத்துவதற்குத் தனி முன்னுரிமை அளிக்க வேண்டும் என தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசுகளை நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
