பாஜக பெண் நிர்வாகியின் புகாரைத் தொடர்ந்து அவதூறு வழக்கில் முன்னாள் பாஜக நிர்வாகி திருச்சி சூர்யா கைது செய்யப்பட்டுள்ள நிலையில், யூட்யூபர் முக்தார் தேடிவருகிறது காவல்துறை.
பிரபல கார், பைக் ரேசருமான அலிசா அப்துல்லா கடந்த 2022 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். அவருக்கு பாஜகவில் தமிழக இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளராக பொறுப்பு வழங்கப்பட்டது. பிரசவத்திற்காக இவர் கடந்த ஒரு வருடகாலமாக அரசியல் நிகழ்வில் இருந்து விலகி இருந்தார். இந்த நிலையில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் யூட்யூபர் முக்தார் மற்றும் முன்னாள் பாஜக நிர்வாகியான திருச்சி சூர்யா ஆகியோர் தன்னைப்பற்றியும் தனக்கு பிறந்த இரட்டை குழந்தைகளை பற்றியும் அவதூறாக பேசுவதாகவும், தொடர்ந்து பெண்கள் பற்றி அவதூறாக பேசி வருவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என அலிஷா அப்துல்லா காவல் ஆணையர் அலுவலகத்தில் புதன்கிழமை புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு – சைபர் க்ரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். தகவல் தொழில் நுட்ப சட்டம், அவதூறு பரப்புதல், பெண்ணின் கண்ணியத்திற்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தநிலையில், நேற்று காலை திருச்சி சூர்யா கைது செய்யப்பட்டுள்ளார்.

youtuber Mukthar
விசாரணையின் அடிப்படையில் முதற்கட்டமாக திருச்சியில் வைத்து திருச்சி சூர்யாவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், youtuber முக்தார் தலைமறைவாக இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி சூர்யாவை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அழைத்து வந்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.
