தவெக அரசு ஒரு சோஃபா மாடல் அரசுதான் என்றும், அதற்கான விளக்கத்தையும் அமைச்சர் வன்னி அரசு கூறியுள்ளார்..
Summary
சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்த விஜய் தலைமையிலான தவெக அரசு, கூட்டணி கட்சிகளின் ஆதரவில் பெரும்பான்மையை நிரூபித்தது. திமுக தரப்பில் ‘சோஃபா மாடல் அரசு’ என விமர்சனங்கள் எழுந்த நிலையில், சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு, SOFA என்பதற்கு Social Justice, Organised Action, Freedom, Anti Corruption & Caste என புதிய விளக்கம் அளித்தார்.
சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் வென்று தனிம்பெருங்கட்சியாக உருவெடுத்த விஜய் தலைமையிலான தவெக, காங்கிரஸ், இடதுசாரிகள், முஸ்லிம் லீக் மற்றும் விசிகவின் ஆதரவைத் தொடர்ந்து பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியைப் பிடித்தது. இதில் இடதுசாரிகளை தவிர, காங்கிரஸ், முஸ்லிம் லீக் மற்றும் விசிகவை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சரவையில் இடமளிக்கப்பட்டது.

விஜய் – திருமாவளவன்
இந்தசூழலில் திமுக கூட்டணியில் இருந்து வெற்றிபெற்று தவெகவிற்கு ஆதரவு தெரிவித்ததற்காக திமுக தரப்பில் கடுமையான விமர்சனங்கள் விசிக மீது வைக்கப்பட்டன. அதுமட்டுமில்லாமல் தவெக அரசை சோஃபா மாடல் அரசு என்றும், அதை விசிகவுடன் ஒப்பிடப்பட்டும் விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில் தான் சமீபத்தில் புதியதலைமுறை உடன் நேர்காணலில் பங்கேற்ற அமைச்சர் வன்னியரசு, தவெக சோஃபா மாடல் அரசுதான் என்றும், அதற்கான விளக்கம் ஒன்றையும் கொடுத்துள்ளார்.
தவெக அரசு சோஃபா மாடல் அரசுதான்!
புதிய தலைமுறை உடனான நேர்காணலில் பங்கேற்ற சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு பேசுகையில், தவெக அரசு சோஃபா மாடல் அரசுதான், S-Social Justice, O-Organised Action, F-Freedom, A-Anti Corruption & Caste என விளக்கம் கொடுத்தார்.
மேலும், முதல்வர் விஜய் பதில் சொல்வதை விட செயலில் காட்டுகிறார், கடந்த திமுக அரசின் நிலைப்பாடுகள் தவெக அரசிலும் தொடர்கின்றன. திமுக – தவெக ஆட்சி இடையே கொள்கை அளவில் பெரிய வித்தியாசம் இல்லை என்று கூறினார்.
திருமாவளவன் குறித்து பேசிய அவர், தான் முதல்வராக கிடைத்த வாய்ப்பை மறுத்தவர் விசிக தலைவர் திருமாவளவன். தவெக அரசு தொடர திருமாவளவன் முக்கிய காரணம், இந்த அரசு தொடர்கிறது என்றால் அதற்கு எங்கள் தலைவர் எடுத்த முடிவுதான் காரணம்; அவர் அந்த முடிவை எடுக்கவில்லை என்றால் தற்போது சூழல் வேறுமாதிரி இருந்திருக்கும், திருமாவளவன் ஒரு கிங் மேக்கர் என்று பேசியுள்ளார்.
