தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலின்போது, சில தொகுதிகளில் உள்ள விசிகவினர் கூட்டணி கட்சிகளுக்கு ஒத்துழைப்பு தரவில்லை என புகார் வந்துள்ளது. அவ்வாறு, ஒத்துழைக்காதவர்கள் குறித்து தகவல் திரட்டப்படுகிறது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
Summary
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாக, திமுக கூட்டணிக்குள் பதற்றம் அதிகரித்துள்ளது. தேர்தல் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தொங்கு சட்டசபை சாத்தியத்தை சுட்டிக்காட்ட, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆட்சிப் பங்குக்காக புதிய கணக்கில் இறங்கியுள்ளன. இதேநேரத்தில், கூட்டணி கட்சிகளுக்கு ஒத்துழைக்காத விசிக நிர்வாகிகள்மீது திருமாவளவன் வெளிப்படையாக அதிருப்தி தெரிவித்திருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23-ம் தேதி நடந்து முடிந்திருக்கும் நிலையில், நாளை மறுநாள் (மே 4) வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தமிழக வெற்றிக் கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி என 4 முனைப்போட்டி நிலவி வருகிறது. கடந்த, ஏப்ரல் 29-ம் தேதி வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் பெரும்பாலானவை, திமுக தலைமையிலான கூட்டணியே மீண்டும் ஆட்சி அமைக்கும் எனக் கூறி வருகின்றன.
தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம்
அதேபோல, அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்கும் என ஒரு சில கருத்துக் கணிப்புகளும், தவெகவுக்கு ஒரு சில கருத்துக் கணிப்புகளும் சாதகமான முடிவு வர வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ள நிலையில், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டசபை அமைய வாய்ப்பிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்தசூழலில் தான், பலகட்ட பேச்சுவார்த்தைக்களுக்குப் பிறகும் இழுபறிகளுக்குப் பிறகும் திமுக கூட்டணி உறுதியாகியிருந்த நிலையில், தேர்தல் பிந்தைய கருத்துக் கணிப்புகளுக்குப் பிறகு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மீண்டும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கருத்துக்கு நகர்ந்திருப்பதாக தெரிகிறது. அக்கட்சியின் மாநிலப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், தமிழகத்தில் காங்கிரஸ் இனி ஆளும் கட்சி அல்லது எதிர்க்கட்சி அந்தஸ்தில்தான் இருக்கும் எனப் பேசியிருந்தது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.
இதைத்தொடர்ந்து, திமுக கூட்டணியில் உள்ள மற்றக் கட்சிகளும் திமுகவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுப்பது போலவே, பேசி வருகின்றனர். குறிப்பாக, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தேர்தல் முடிவுகள் வெளியாகும் போது தவெகவிற்கு ஆதரவாக அலை வீசுவதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளன என தவெக சாதகமான கருத்து தெரிவித்திருக்கிறார்.
தொடர்ந்து, சிபிஎம் முன்னாள் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், தேர்தலின்போது இடதுசாரிகளுக்கு உரிய அங்கீகாரம் தர திமுக மறுத்துவிட்டது.
கே. பாலகிருஷ்ணன்
அமையப்போகும் திமுக ஆட்சி எப்படி இருக்கும் என்பது கேள்விக்குறிதான். ஏனென்றால் இளைஞர்கள் மத்தியில் கொந்தளிப்பு காணப்படுகிறது. வேலையில்லா திண்டாட்டத்தை தீர்க்க உருப்படியான நடவடிக்கைகளை அரசு எடுக்கவில்லை. மாற்றம் வேண்டும் என்கிற மிகப்பெரிய எழுச்சி, அரசியல் புரிந்துணர்வு இளைஞர்களிடம் ஏற்பட்டிருக்கிறது. இது வரவேற்கத்தக்கது. பாராட்டத்தக்கது என பேசியிருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.
அதேபோல, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, மே-4க்குப் பிறகு பதிலளிக்கிறேன் எனத் தெரிவித்திருக்கிறார்.
இவ்வாறு, திமுக கூட்டணியில் உள்ள முக்கியக் கட்சிகள் தேர்தல் வாக்குப்பதிவுக்கு பிறகு, வேறொரு கோணத்தில் பேசி வரும் நிலையில், விசிக தலைவர் திருமாவளவன், தனது கட்சினரே கூட்டணி கட்சிகள் போட்டியிடும் இடங்களில் ஒத்துழைப்பு தரவில்லை என புகாரெழுந்திருகிறது என விமர்சித்திருக்கிறார்.
திருமாவளவன்
இதுகுறித்து, தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ள காணொளியில் பேசும்போது, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில், விசிக போட்டியிடாத தொகுதிகளில் ஒரு சில இடங்களில், விசிகவினர் கூட்டணி கட்சியினருக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என புகார் வந்திருக்கிறது. கூட்டணி கட்சிகளுக்கு ஒத்துழைக்காதவர்கள் குறித்து தகவல்கள் திரட்டப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, திமுக கூட்டணியில் விசிகவுக்கு குறைவான தொகுதிகளே ஒதுக்கப்பட்டிருப்பதாக அக்கட்சியினர் இடையே சலசலப்பு ஏற்பட்டிருந்த நிலையில், வாக்கு எண்ணிக்கைக்கு 2 நாட்களே உள்ள சூழலில், விசிகவினர் மீது திருமாவளவன் அதிருப்தி தெரிவித்திருப்பது அக்கட்சினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
