ஈரான் போரில் தனக்கு உதவாததால் நேட்டோ அமைப்பையே உடைக்கும் வேலையில், அமெரிக்கா ஈடுபட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ஈரானுடனான போரில் அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கத் தவறியதால் நேட்டோவில் இருந்து ஸ்பெயினை நீக்க நேட்டோ அமைப்புக்கு அமெரிக்க ராணுவம் சார்பில் மின்னஞ்சல் அனுப்பப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பொறுப்பேற்றதும் நேட்டோ உறுப்பினர் நாடான டென்மார்க்குக்குச் சொந்தமான கிரீன்லாந்தை அமெரிக்காவோடு இணைக்கவுள்ளதாக பேசினார். இதற்கு ஐரோப்பிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்ததோடு, கிரீன்லாந்துக்குச் சிறிய அளவிலான தங்கள் படைகளையும் அனுப்பின. இதற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும், நேட்டோ அமைப்புக்கு அமெரிக்காவே அதிக பங்களிப்பு செய்துள்ளது என்றும், அந்த அமைப்பால் அமெரிக்காவுக்கு எந்தப் பயனும் இல்லை என்றும் கருத்து தெரிவித்தார். அதோடு ஈரான் போரில் அமெரிக்காவுக்கு ஆதரவாக நேட்டோ நாடுகள் வராத நிலையில், நேட்டோ அமைப்பையே கலைக்கும் விதமாக ட்ரம்ப் கருத்து தெரிவித்தார். இப்படி நேட்டோ அமைப்பில் தொடர்ந்து பல்வேறு சிக்கல்கள் தொடர்ந்துவரும் நிலையில், அந்த அமைப்பையே உடைக்கும் வேலைகளில் அமெரிக்கா ஈடுபட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

nato
இதுகுறித்து ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், ஈரானுடனான போரில் அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கத் தவறியதால் நேட்டோவில் இருந்து ஸ்பெயினை நீக்க நேட்டோ அமைப்புக்கு அமெரிக்க ராணுவம் சார்பில் மின்னஞ்சல் அனுப்பப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. அதேநேரம், நேட்டோ அமைப்பில் இருந்து ஒரு நாட்டை இடைநீக்கம் செய்ய எந்த விதியும் இல்லை என்றும், இதனால் ஸ்பெயின் நேட்டோவில் இருந்து வெளியேற்றப்படாது என்றும் நேட்டோ அதிகாரிகள் கூறியதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. ஈரான் போரில் அமெரிக்க விமானங்கள் தங்கள் தளங்களில் தரையிறங்க ஸ்பெயின் அனுமதி மறுத்த நிலையில், அந்த விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பவும் அனுமதிக்கவில்லை. இது ஈரான் போரில் அமெரிக்காவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
