ராம் பண நெருக்கடி காரணமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. நிறைய பணம் போட்டு, கடின உழைப்பை கொடுத்த ஒரு படம் இப்படி இருப்பது மிகவும் வேதனையளிக்கிறது.
Summary
மலையாள இயக்குநர் ஜீத்து ஜோசப், மோகன்லால்–த்ரிஷா நடிப்பில் 2020ல் தொடங்கிய ‘ராம்’ படம் பண நெருக்கடி காரணமாக கிடப்பில் இருப்பதாக கூறியுள்ளார். UK, மொரோக்கோ, இந்தியா ஆகிய நாடுகளில் படப்பிடிப்பு நடந்ததாகவும், துனிசியாவில் சில காட்சிகள் எடுக்க வேண்டியிருப்பதாகவும் தெரிவித்தார். தயாரிப்பாளர்களின் முடிவே படத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் எனவும் கூறினார்.
மலையாளத்தில் பிரபலமான இயக்குநர் ஜீத்து ஜோசப். `Memories’, `Drishyam’, `Neru’, `Nunakkuzhi’ எனப் பல ஹிட் படங்களை கொடுத்தவர், தமிழில் கமல் நடித்த `பாபநாசம்’, கார்த்தி நடித்த `தம்பி’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இவர் தற்போது மோகன் லால் நடித்துள்ள `Drishyam 3′ படத்தை இயக்கியுள்ளார். மே 21ம் தேதி அப்படம் வெளியாகவுள்ள நிலையில் அது தொடர்பான பேட்டிகளை அளித்து வருகிறார்.

Ram
அவர் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் 2020ம் ஆண்டு மோகன்லால், த்ரிஷா நடிப்பில் ஜீத்து இயக்க துவங்கிய `ராம்’ படம் என்ன நிலையில் உள்ளது எனக் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த ஜீத்து ஜோசப் “ராம் பண நெருக்கடி காரணமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. நிறைய பணம் போட்டு, கடின உழைப்பை கொடுத்த ஒரு படம் இப்படி இருப்பது மிகவும் வேதனையளிக்கிறது. அதனை துவங்குவது குறித்து தயாரிப்பாளர்கள் தான் தீர்மானிக்க வேண்டும். UK, மொரோக்கோ, இந்தியா ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடத்தினோம். இன்னும் சில காட்சிகள் துனிசியாவில் படமாக்க வேண்டும்.
அது ஒரு Larger Than Life கதாபாத்திரமோ, ஆக்ஷன் படமோ இல்லை. ஒரு நபரின் எமோஷனல் பயணமே அப்படம். அதே சமயத்தில் அதிலும் நிறைய சண்டைக்காட்சிகள் உண்டு. ஆனாலும் அது வேறு ஒரு கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டிய சினிமா. அது இரு பாகங்களாக உருவாக்க திட்டமிட்டோம். இரு பாகங்களையும் ஒன்றாகவே எடுக்க முயற்சித்தோம். நான் முதலில் முதல் பாகத்தை தனியாக எடுத்துவிடலாம் என கூறினேன். ஆனால் இரு பாகங்களுக்கும் சேர்த்து எடுக்க வேண்டியதாகிவிட்டது. இப்போது முதல் பாகத்துக்கு 25 நாள், இரண்டாம் பாகத்துக்கு 25 நாள் படப்பிடிப்பு பாக்கி இருக்கிறது. அந்த 50 நாட்கள் படப்பிடிப்பு முடித்தால் படம் முடிந்துவிடும்.” என்றார்.
