கடந்த வாரத்தில் நடைபெற்ற நீயாநானா விவாத நிகழ்ச்சியில் காதல் முறிவு குறித்து உரையாடிய யாமினிக்கு நிறைய ஆதரவு குரல் இருந்தாலும், பலபேர் டாக்ஸிக் பெண் என விமர்சித்து பதிவுகளை பதிவிட்டனர்.
Summary
நீயா நானா நிகழ்ச்சியில் 4 ஆண்டுகால காதல் முறிவு குறித்து உணர்ச்சிவசப்பட்டு பேசிய யாமினி, தன் டாக்ஸிக் நடத்தையை ஒப்புக்கொண்டதால் வைரலானார். பின்னர் சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களும், கேரக்டர் அசாசினேஷனும் அதிகரித்தது. இதனால் வீடியோ வெளியிட்ட அவர், “நான் லவ் தான பண்ணேன், வேற எந்த தப்பும் பண்ணல, தயவு செய்து நிறுத்துங்க” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காதல் தோல்வியில் தவிக்கும் இளைஞர்கள், அவர்களின் பெற்றோர்கள் என நடைபெற்ற நீயா நானா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட யாமினி என்ற பெண், அவருடைய 4 ஆண்டுகால காதல் முறிவு குறித்து உடைந்த குரலில் கண்ணீர்மல்க பேசினார். கடந்த 8 மாதங்களாக தான் எப்படி காதல் முறிவிலிருந்து வெளிவர முடியாமல் தவிப்பதாக தெரிவித்த அவர், தன்னுடைய டாக்ஸிக் நடத்தையால் காதலித்த நபரை நிறைய தொந்தரவு செய்ததையும் ஒப்புக்கொண்டார். தன்னைப்போல யாரும் இருக்கக்கூடாது என்று வெளிப்படுத்திய யாமினி, மற்றவர்கள் எப்படி காதல் முறிவிலிருந்து தங்களை மீட்டுக்கொண்டுவந்தார்கள் என தெரிந்துகொள்ளவே நிகழ்ச்சிக்கு வந்ததாகவும் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களில் பலரும் யாமினி தன்னுடைய காதல் முறிவிலிருந்து மீண்டுவர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். நிகழ்ச்சி நெறியாளர் கோபிநாத்தும் வாழ்க்கையை காதலுக்குள் சுருக்கிக்கொள்ளாதீர்கள், உலகத்தில் நிறைய விசயங்கள் இருக்கின்றன என்று அறிவுரை கொடுத்தார்.
இந்நிகழ்ச்சி வெளியானபிறகு சமூகவலைதளங்களில் பலரும் யாமினியின் காதலின் வலியை புரிந்துகொள்ள முடிகிறது என்றும், அவர் விரைவில் அதிலிருந்து வெளியே வரவேண்டும் என்றும் தங்களுடைய ஆதரவை வெளிப்படுத்தினர். ஆனால் மற்றொரு பக்கம் இது எப்படி காதலாக முடியும், அவர் செய்தது ஒரு டாக்ஸிக் அணுகுமுறை, நல்லவேலையாக அந்தபையன் விலகிவிட்டார் என யாமினிக்கு எதிரான பதிவுகளையும் தொடர்ந்து பதிவிட்டனர். இப்படி ஆதரவு கிடைத்த அதேவேளையில் யாமினியின் காதலை விமர்சித்ததோடு, அவருடைய கேரக்டரையும் டார்கெட் செய்து பல பதிவுகள் சமூகவலைதளத்தில் வலம்வந்தன.
இந்தசூழலில் தான் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கும் யாமினி, ‘நான் லவ் தான பண்ணேன், வேற எந்த தப்பும் பண்ணலயே, இதோடு எல்லாத்தையும் ஸ்டாப் பண்ணுங்க எனக்கு உங்களுடைய பதிவுகள் அதிகமா காயப்படுத்துகிறது’ என பேசியுள்ளார்.
இன்ஸ்டாவில் அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில், “கடந்த வாரம் முழுக்க என்னுடைய வீடியோக்களை நீங்க பார்த்திருப்பிங்க. நான் யாரென்றே தெரியவில்லை என்றாலும், என்னை பயங்கரமா திட்டிருப்பீங்கனு தெரியும். நிறைய பேரு எனக்கு உங்களுடைய அன்பையும், ஆதரவையும் கொடுத்திருந்திங்க, அது எல்லாத்துக்கும் நிறைய நன்றி. பலபேர் உங்களுடைய நிலைமையை எங்களாலும் புரிந்துகொள்ள முடிகிறது என்று மெசேஜ் பண்ணியிருந்திங்க, எல்லாரும் இந்த நிலைமைய கடந்து வந்திருப்பீங்க. நான் அந்த நிகழ்ச்சிக்கு நானா தான் போனன், மத்தவங்களோட எண்ணங்கள் எப்படி இருக்குன்னு தெரிஞ்சிக்க போனன். அதுல போனா ஃபேம் கிடைக்கும் என்பதற்காக போகவில்லை.
நான் இதெல்லாம் நடக்கும்னு எதிர்ப்பார்க்க கூட இல்லை, ஏன் நிறையபேரு நான் பேசியதை அதிகம் பகிர்ந்துகொண்டார்கள் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஏன்னா நிறைய பேரு என்னுடைய நிலைமையை அவங்களோடு ரிலேட் பண்ணிகிட்டதா சொன்னாங்க.
ஒரு விசயத்த மட்டும் இங்க பதிவு பண்ணிக்க விரும்புறன், டாக்ஸிசிட்டி என்பதை நான் பேசும்போது பயன்படுத்தி இருந்தன். நான் ஏன் அப்படி சொன்னன்னா, பிரேக்கப் ஆனபிறகு நிறைய விசயங்களை நான் தவறா கையாள ஆரம்பிச்சன். நான் அவங்களை தொந்தரவு செஞ்சிட்டு இருந்ததை தான் டாக்ஸிக்னு சொன்னன். ஆனா நான் டாக்ஸிக்கா இருந்ததால தான் அந்த பையன் ஓடிப்போயிட்டான்னு நிறைய பேரு சொல்லிட்டு இருக்கீங்க. அதெல்லாம் பார்க்கும்போது என்னை காயப்படுத்துது.
நிறைய பேரு இது லவ்வே இல்ல, இது நாடக உறவுனுலாம் சொல்லும்போது என்னையும் காயப்படுத்தும், அவங்களையுமே அது காயப்படுத்தும். நீங்க உங்களோட கண்ணோட்டத்தை வெளிப்படுத்த வெளிப்படுத்த அது இன்னும் நிறைய காயப்படுத்துது. நிறைய பேரு வியூஸ்காகவும், ஃபோல்லோவர்ஸ்காகவும் என்னென்னமோ பன்றாங்க, இதுக்குமேல அப்படி எல்லாம் பண்ணாதிங்க. நான் லவ் தான்ங்க பண்ணேன், வேற எந்த தப்பும் பண்ணல, அதுவே தப்புன்ற மாதிரி பேசாதீங்க” என பேசியுள்ளார்.
