அனிருத் ஹீரோவாக நடிக்க வேண்டியது. நானும் அனிருத்துடன் நடிப்பதாக இருந்தது. அதற்காக படத்தின் தயாரிப்பாளர் எனக்கு 2 லட்சத்திற்கு செக் கொடுத்தார்.
இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் அனிருத். முன்னணி இயக்குநர்கள், நடிகர்கள் பலரது படங்களில் பணியாற்றியவர், இப்போதும் பிஸியாக பணியாற்றி வருகிறார். இவர் இசையமைப்பாளராக அறிமுகமான சமயத்தில் நடிகராக அறிமுகமாகவும் சில முயற்சிகளை எடுத்தார் அனிருத். ஆனால் அது நடக்கவில்லை. அந்த சம்பவங்கள் பற்றி சமீபத்தில் நடந்த LIK பட நிகழ்வில் தெரிவித்தனர் இயக்குநர் ராம் மற்றும் ஆர் ஜே பாலாஜி.
இயக்குநர் ராம் பேசிய போது “நானும் ரௌடிதான் கதையை ஒரு 300 முறையாவது கேட்டிருப்பேன். அத்தனை முறையும் நான் சிரித்திருக்கிறேன். அப்போது அனிருத் தான் அந்தப் படத்தின் ஹீரோ. ஆனால் அதை அனிருத் மிஸ் செய்துவிட்டார். அந்தக் கதையை அன்று தமிழ் சினிமாவின் அத்தனை ஹீரோவிடமும் விக்கி கூறியிருப்பார். ஆனாலும் ஹீரோ அமையவில்லை எனும் போது விஜய் சேதுபதியை முயற்சி செய்யலாம் எனக் கூறினேன். அப்படிதான் அந்தப் படம் அமைந்தது.” என்றார்.
ஆர்.ஜே பாலாஜி சொன்ன போது “இந்தப் படத்திற்கும் அனிருத்துக்கும் எனக்கும் ஒரு சம்பந்தம் இருக்கிறது. இதில் ஆக்கோ என்ற படத்துக்காக போடப்பட்ட எனக்கென யாருமில்லையே பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்த `ஆக்கோ’ படத்தில் அனிருத் ஹீரோவாக நடிக்க வேண்டியது. நானும் அனிருத்துடன் நடிப்பதாக இருந்தது. அதற்காக படத்தின் தயாரிப்பாளர் எனக்கு 2 லட்சத்திற்கு செக் கொடுத்தார். நான் அன்றே அதனை வங்கியில் போட்டு பணத்தை எடுத்து என் மகனின் முதல் பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடிவிட்டேன்.
ஆனால், அந்தப் படம் அனிருத் நடிக்க மாட்டேன் என சொன்னதால் கைவிடப்பட்டது. நான் ஒரு மாதம் கழித்து பணம் சேர்த்து, தயாரிப்பாளரிடம் பணத்தை திருப்பி கொடுக்க தொடர்பு கொண்டேன். அவர் அனிருத் எப்போதோ அந்த பணத்தை திருப்பி கொடுத்துவிட்டார் என்றார். என் மகன் பிறந்தநாளுக்கு அனி கொடுத்த பரிசு அது. அவரது முதல் பாடலான ஒய் திஸ் கொலவெறி பாடல் என்னுடைய நிகழ்ச்சியில் தான் லான்ச் செய்தார். அப்போதிருந்து அவருக்கும் எனக்கும் சகோதரத்துவம் துவங்கியது” என்றார்.
