இஸ்ரேலின் ரசாயன மையத்தில் ஈரான் நடத்திய தாக்குதலின் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Summary
அமெரிக்கா, இஸ்ரேல் படைகள் மற்றும் ஈரான் இடையிலான நீடித்த போரின் பின்னணியில், ஈரான் ஏவுகணைத் தாக்குதலால் இஸ்ரேலின் தெற்கிலுள்ள நியோட் ஹோவாவ் தொழில்பேட்டையில் அமைந்த ADAMA ரசாயன ஆலை கடுமையாக சேதமடைந்தது. வானில் தகர்க்கப்பட்ட ஏவுகணையிலிருந்து விழுந்த கொத்து குண்டுகள் ஆலையைத் தாக்கி பெரும் தீ, நச்சுப் புகை, ரசாயனக் கசிவு ஏற்படுத்த, பொதுமக்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளுக்கும் ஈரானுக்கும் இடையே நடக்கும் போர் ஒரு மாதத்துக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்த தாக்குதலில் முதல் நாளிலேயே ஈரானின் அதிஉயர் தலைவராக இருந்த அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டார்.
இது ஈரானின் கோபத்தை அதிகரித்த நிலையில், ஈரானின் தாக்குதல் பலமடங்கு அதிகரித்தது. மேலும் ஈரானின் ஆதரவு போராளி குழுக்களும் இந்த தாக்குதலில் இணைந்துள்ளனர். லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பும் இஸ்ரேலின் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.

இஸ்ரேல் – ஈரான்
இது இஸ்ரேலுக்கு பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அந்நாட்டுக்குள் புகுந்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் இஸ்ரேலில் இருந்தபடி அந்நாட்டின் மீது ஏவுகணைகள் வீசியும் தாக்குதல் நடத்தி வருகின்றது.
இந்த நிலையில், ஈரான் வீசிய ஏவுகணை தாக்குதலில் இஸ்ரேலின் ரசாயன ஆலை தாக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேலின் தெற்குப் பகுதியில் உள்ள நியோட் ஹோவாவ் தொழில்பேட்டையில் ADAMA ரசாயன ஆலை அமைந்துள்ளது.
இந்த ஆலையை குறிவைத்து ஈரான் கொத்து குண்டுகள் நிரப்பப்பட்ட ஏவுகணையை வீசி தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த ஏவுகணையை வானிலேயே இஸ்ரேலின் பாதுகாப்பு அமைப்பு வீழ்த்தினாலும், அதிலிருந்து விழுந்துள்ள குண்டுகள் ADAMA ரசாயன ஆலையை தாக்கியுள்ளது.

இந்த தாக்குதலைத் தொடர்ந்து அங்கு பெரும் தீ விபத்து ஏற்பட்டதோடு, நச்சுப் புகையும், ரசாயனக் கசிவும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த பகுதியில் வசித்து வந்த பொதுமக்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். இதனிடையே இந்த தாக்குதல் காரணமாக ADAMA ரசாயன ஆலையிலிருந்து வெளிவரும் புகை குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ஈரான் தாக்குதலின் தீவிரத்தை உணர்த்தியுள்ளது.
