போதைப்பொருள், தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கம் மற்றும் நடத்தை பிரச்சினைகள் போன்றவற்றை கருத்தில் கொண்டு சிறுவர்கள் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்த தடை விதிப்பதாக முதலமைச்சர் சித்தராமையா கூறியுள்ளார்.
Summary
கர்நாடகா மற்றும் ஆந்திர பிரதேச அரசுகள் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடக பயன்பாட்டைத் தடைசெய்யும் திட்டத்தை அறிவித்துள்ளன. இந்த நடவடிக்கை, குழந்தைகளின் நல்வாழ்வை பாதுகாக்கும் நோக்கில், போதைப்பொருள் மற்றும் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களிலிருந்து அவர்களைப் பாதுகாக்கும் முயற்சியாகும்.
கர்நாடகத்தில் தடை..
கர்நாடக அரசு 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகப் பயன்பாட்டைத் தடை செய்யும் என்று முதலமைச்சர் சித்தராமையா வெள்ளிக்கிழமை சட்டமன்றத்தில் 2026–27 மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்யும் போது அறிவித்தார்.

Karnataka CM Siddaramaiah
பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் முன்னதாக நடந்த கலந்துரையாடல்களைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. அப்போது, குழந்தைகளிடையே போதைப்பொருள், தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்திற்கு ஆளாகுதல் மற்றும் நடத்தை சார்ந்த பிரச்சினைகள் இருப்பதால் 16 வயதுக்குட்பட்டவர்களுக்கு சமூக ஊடகப் பயன்பாடு தடைசெய்யப்படும் என்றும், செயல்படுத்தல் குறித்த விரிவான வழிகாட்டுதல்கள் கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.
இந்த நடவடிக்கை நாடு தழுவிய கவனத்தை ஈர்த்துள்ளது, சமூக ஊடக பயன்பாட்டிற்கு வயது அடிப்படையிலான கட்டுப்பாட்டை முன்மொழிந்த முதல் இந்திய மாநிலங்களில் கர்நாடகாவும் ஒன்றாகும்.
ஆந்திர பிரதேசத்திலும் குழந்தைகள் பயன்படுத்த தடை
13 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடக தளங்களை அணுகுவதைத் தடுக்க அடுத்த 90 நாட்களுக்குள் ஒரு திட்டத்தைத் தொடங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறினார்.
13–16 வயதுக்குட்பட்டவர்களுக்கான சாத்தியமான விதிமுறைகள் குறித்து விவாதங்கள் நடந்து வருவதாகவும், ஆலோசனைகள் மற்றும் பரந்த ஒருமித்த கருத்துக்குப் பிறகு ஒரு
சமூக ஊடகங்களின் சாத்தியமான எதிர்மறை தாக்கத்திலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதில் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாகவும், அவர்களின் நல்வாழ்வைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் அவர் கூறினார்.
இந்தியாவில் 18 வயதுக்குட்பட்டவர்களின் தரவுகளைச் சேகரிக்கப் பெற்றோரின் அனுமதி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கர்நாடகா மற்றும் ஆந்திர பிரதேசத்தின் நடவடிக்கை நாடு தழுவிய கவனத்தை ஈர்த்துள்ளது.
சிறுவர்களின் மனநலம் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு 16 வயதுக்குட்பட்டவர்களுக்கான சமூக ஊடகத் தடையை உலக நாடுகள் தீவிரப்படுத்தியுள்ளன. 16 வயதுக்குட்பட்டவர்களுக்கு சமூக ஊடகத் தடை விதித்த முதல் நாடு ஆஸ்திரேலியா. இதற்கான சட்டம் நவம்பர் 2025 இல் நிறைவேற்றப்பட்டு டிசம்பர் 2025 இல் அமலுக்கு வந்தது. விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு சுமார் 50 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது . நார்வே சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கான குறைந்தபட்ச வயது வரம்பை 15ஆக உயர்த்த முடிவுசெய்துள்ளது.
வெறுப்புப் பேச்சு, ஆபாசக் காட்சிகள் மற்றும் போலிச் செய்திகளிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க ஸ்பெயினில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த அந்நாட்டு அரசு அதிரடித் தடைவிதித்துள்ளது .

குழந்தைகள்
பிரான்ஸ் மற்றும் மலேசியா ஆகிய நாடுகள் 2026 ஜனவரி முதல் இதற்கான சட்டங்களைக் கொண்டுவந்துள்ளது .
அதிகப்படியான திரை நேரம் மனச்சோர்வையும் தூக்கமின்மையையும் உண்டாக்குவதுடன், சைபர் புல்லியிங் (Cyber Bullying) எனப்படும் இணைய வழித் துன்புறுத்தல்களுக்குச் சிறுவர்கள் எளிதில் இலக்காவதாக ஆய்வுகள் கூறுகின்றன. என்னதான் சட்டங்கள் இயற்றினாலும், பெற்றோரின் கண்காணிப்பு மற்றும் டிஜிட்டல் விழிப்புணர்வு மட்டுமே இதற்கு நிரந்தர தீர்வாகும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
