மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2020 -2024ஆம் ஆண்டுகளுக்கு இடையே உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காகக் காத்திருந்தவர்களில் 2,805 பேர் உயிரிழந்துள்ளனர்.
உறுப்பு மாற்ற சிகிச்சை குறித்து போதுமான அளவு பதிவு செய்யப்படாததால் பல இறப்புகள் பதிவு செய்யப்படாமல் போகின்றன என்றும், உறுப்புகள் கிடைக்காமல் இறக்கும் மக்களின் உண்மையான எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்றும் நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
மரணித்த பிறகும் இந்த மண்ணில் தொடர்ந்து வாழ முடியும் என்றால், அது உறுப்பு மாற்று அறுவைசிகிச்சையால் மட்டுமே முடியும். அதாவது, நோயுற்ற அல்லது செயலிழந்த உறுப்பை, தானம் செய்பவரின் ஆரோக்கியமான உறுப்பால் மாற்றப்படுவதே உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை என்று அழைக்கப்படுகிறது. இது, மருத்துவத் துறையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியுள்ளது. உலகளவில் இந்தியா உறுப்பு மாற்று அறுவைசிகிச்சையில் மூன்றாவது இடத்தில் உள்ளது. முதல் இரண்டு இடங்களில் அமெரிக்கா மற்றும் சீனா உள்ளது. இந்த நிலையில், 2020 – 2024 ஆண்டுகளுக்கு இடையே உறுப்பு மாற்று அறுவைசிகிச்சைக்காகக் காத்திருந்தவர்களில் 2,805 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது.

organ transplant
உறுப்பு மாற்று அறுவைசிகிச்சைக்காகக் காத்திருந்து இறந்தவர்களில் 1,425 பேர் டெல்லியைச் சேர்ந்தவர்கள். மஹாராஷ்டிராவில் 297 பேர் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சைக்காகக் காத்திருந்து இறந்திருக்கிறார்கள். 233 மரணங்களுடன் தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் இருக்கிறது.
தேசிய அளவிலான இறப்புகளில் கிட்டத்தட்ட பாதி டெல்லியில் பதிவாகியுள்ள நிலையில், தென் மாநிலங்கள் (தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா) அதிக அளவில் இதய மாற்று அறுவைசிகிச்சைகள் (65% இதய மாற்று அறுவை சிகிச்சைகள்) நடந்துள்ளன.

organ transplant
இதற்கிடையே, டிசம்பர் 2025 வரையில் மொத்தம் 82,285 நோயாளிகள் காத்திருப்புப் பட்டியலில் இருந்தவர்கள். இவர்களில் மாற்று சிறுநீரகத்துக்காக 60,590 பேரும், மாற்று கல்லீரலுக்காக 18,724 பேரும், மாற்று இதயத்துக்காக 695 பேரும், மாற்று நுரையீரலுக்காக 970 பேரும், மாற்று கணையத்துக்காக 306 பேரும் காத்திருப்பவர்களின் பட்டியலில் இருந்தவர்கள். உறுப்பு மாற்ற சிகிச்சை குறித்து போதுமான அளவு பதிவு செய்யப்படாததால் பல இறப்புகள் பதிவு செய்யப்படாமல் போகின்றன என்றும், உறுப்புகள் கிடைக்காமல் இறக்கும் மக்களின் உண்மையான எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்றும் நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். இந்தியாவில் 10 லட்சம் மக்கள்தொகையில் ஒருவருக்கும் குறைவாகவே உறுப்புகளை தானம் செய்கிறார்கள். உடல் ஊறுப்பு தானம் விகிதங்கள் குறைவாக இருப்பது, மூளை இறப்புகள் குறித்த அறிவிப்புகள் சரியாக தெரியாமல் இருப்பது மற்றும் குறைந்த உள்கட்டமைப்பு ஆகியவை இந்த இறப்புகளுக்கு காரணமாக இருக்கிறது என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
