வங்கதேச பிரதமராக தாரிக் ரஹ்மான் வரும் செவ்வாய்கிழமை (நவம்பர் 17) பதவியேற்கவுள்ளார். இந்நிலையில், இவ்விழாவில் பங்கேற்க இந்தியா உட்பட 13 நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
Summary
ஷேக் ஹசீனாவின் ஆட்சி கலைப்பிற்குப் பின், பி.என்.பி வங்கதேச தேர்தலில் வெற்றி பெற்று, தாரிக் ரஹ்மான் பிரதமராக பதவியேற்க உள்ளார். இவரின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க இந்தியா உள்ளிட்ட 13 நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கலைக்கப்பட்டப் பிறகு, அந்நாட்டில் கடந்த 12-ஆம் தேதி நடைபெற்ற பொதுத்தேர்தலில், மொத்தமுள்ள 300 இடங்களில் 201 இடங்களில் வங்கதேச தேசியவாதக் கட்சி (BNP) வெற்றி பெற்றிருக்கிறது. இதையடுத்து, அங்கு முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகனும் பி.என்.பி-யி தலைவருமான தாரிக் ரஹ்மான் வரும் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 17) பிரதமராக பதவியேற்க உள்ளார். இவ்விழா, வங்கதேச நாடாளுமன்றத்தின் தெற்கு மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இந்தநிலையில், இந்தியா, பாகிஸ்தான் உட்பட 13 நாடுகளுக்கு தாரிக் ரஹ்மானின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

முன்னதாக, ஷேக் ஹசீனாவின் வெளியேற்றத்திற்குப் பிறகு 18 மாதங்களாக நீடித்த இடைக்கால ஆட்சியைத் தொடர்ந்து,பி.என்.பியின் இந்த வெற்றி அந்த நாட்டில் ஒரு முக்கிய அரசியல் திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் தாரிக் ரஹ்மானுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார். இதற்கிடையே, ஷேக் ஹசீனாவைத் திருப்பி அனுப்பும்படி இந்தியாவிடம் முறைப்படி கோரிக்கை விடுக்க புதிதாக அமைய உள்ள வங்கதேச தேசியவாதக்கட்சி அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான், வங்கதேச பிரதமராக பதவியேற்கவுள்ள தாரிக் ரஹ்மானின் பதியேற்பு விழாவில் பங்கேற்க இந்தியாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
ஏற்கனவே, தாரிக் ரஹ்மானின் பதவியேற்பு விழாவுக்கு பிரதமர் மோடியையும் அழைப்போம் என பி.என்.பி கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான எஹ்சானுல் ஹக் மிலன் தெரிவித்திருந்தார். தொடர்ந்து, வங்கதேசம் அழைப்பு விடுத்துள்ள 13 நாடுகள் பட்டியலில் இந்தியா, சீனா, பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், மலேசியா, புருனே, இலங்கை, நேபாளம், மாலத்தீவு மற்றும் பூட்டான் ஆகிய நாடுகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
