தமிழகத்தில் நடைபெற்ற ஒவ்வொரு சட்டமன்றத் தேர்தலும் எந்தப் பின்னணியில் நடைபெற்றது, அதன் முடிவு என்ன என பார்த்து வருகிறோம். அவ்வரிசையில் தற்போது 1957ஆம்ஆண்டு தேர்தல் குறித்து பார்ப்போம்…
தமிழகத்தில் நடைபெற்ற ஒவ்வொரு சட்டமன்றத் தேர்தலும் எந்தப் பின்னணியில் நடைபெற்றது, அதன் முடிவு என்ன என பார்த்து வருகிறோம். அவ்வரிசையில் தற்போது 1957ஆம்ஆண்டு தேர்தல் குறித்து பார்ப்போம்…
1957ஆம் ஆண்டு தேர்தல் பல வகைகளில் சிறப்பு பெற்றது. மொழிவாரி மாநில உருவாக்கத்தால் சென்னை மாகாணத்தில் இருந்து தெலுங்கு, கன்னடம், மலையாளம் பேசும் பெரும்பாலான பகுதிகள் பிரிந்தன. இதனால் தமிழ் பேசுபவர்களை பெரும்பான்மையாக கொண்டு சென்னை மாகாணத்தில் நடைபெற்ற முதல் சட்டமன்ற தேர்தலாக 1957 தேர்தல் அமைந்தது. தொகுதிகள் எண்ணிக்கை 375இல் இருந்து 205ஆகக் குறைந்தது.

காமராஜர்
காமராஜர் தலைமையில் ஆளும் காங்கிரஸ் கட்சி தேர்தலைச் சந்தித்தது. திமுக அப்போது உருவாகியிருந்தாலும் அங்கீகாரம் கிடைக்காததால் அதன் வேட்பாளர்கள் உதயசூரியன், சேவல் போன்ற சுயேச்சை சின்னங்களில் 124 தொகுதிகளில் போட்டியிட்டனர்
காமராஜர் சாத்தூர் தொகுதியிலும் அண்ணா காஞ்சிபுரம் தொகுதியிலும் கருணாநிதி குளித்தலை தொகுதியிலும் அன்பழகன் எழும்பூர் தொகுதியிலும் போட்டியிட்டனர். மதிய உணவுத் திட்டம்உள்ளிட்ட சாதனைகளை முன்வைத்து காங்கிரஸ் களம் கண்டது. இத்தேர்தலில் திமுக எழுப்பிய மாநில சுயாட்சி, சமூகநீதி ஆகிய முழக்கங்கள் பேசுபொருளாகின. வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்ற வாசகம் அதிர்வுகளை ஏற்படுத்தியது. சில ஆண்டுகாலம் அரசியலில் இருந்து விலகியிருந்த ராஜாஜி, காங்கிரஸ் சீர்திருத்த குழு என்ற பெயரில் ஒரு அணியை களமிறக்கினார்.

அண்ணா மற்றும் கருணாநிதி
காங்கிரஸில் காமராஜருக்கு எதிராக இருந்தவர்கள் இதில் இணைந்தனர். 1957 மார்ச் 31ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் 151 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்கவைத்தது. திமுக சார்பில் சுயேச்சை சின்னங்களில் நின்றவர்கள் 15 இடங்களில் வென்றனர். காங்கிரஸ் சீர்திருத்த குழு வேட்பாளர்கள் சுயேச்சைகளாக போட்டியிட்டு 26 இடங்களில் வென்றனர். முந்தைய தேர்தலில் எதிர்க்கட்சியாக திகழ்ந்த இந்திய கம்யூனிஸ்ட் இம்முறை 4 இடங்களை மட்டுமே பிடித்தது. மீண்டும் காமராஜர் தலைமையில் அமைந்த அமைச்சரவையில் பக்தவத்சலம், சி.சுப்பிரமணியம், கக்கன், ஆர்.வெங்கட்ராமன் உள்ளிட்ட 7 அமைச்சர்கள் இடம்பெற்றனர்.
