ஈரான் அமெரிக்கா இடையேயான போர் முடிவுக்கு வரவேண்டுமானால் லெபனான் மீதான தாக்குதலை இஸ்ரேல் முழுமையாக நிறுத்த வேண்டும் என ஈரான் உச்சத் தலைவர் மொஜ்தபா காமேனி தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி 28-ம் இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்திய நிலையில், வளைகுடாவில் போர் தொடங்கியது. இந்தத் தாக்குதலின் முதல்நாளிலேயே ஈரானின் முன்னாள் உச்சத் தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். இதையடுத்து, அவரது மகன் மொஜ்தபா காமேனி தற்போது புதிய உச்சத் தலைவராக பதவியேற்றிருக்கிறார். இந்தசூழலில் தான், கடந்த 5 மாதங்களாக வளைகுடாவில் போர் நடைபெற்று வரும் நிலையில், ஈரானுக்கு ஆதரவு தெரிவித்து லெபானானைச் சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகள் மீது தாக்குதல் நடத்தி வந்தது.

ஹிஸ்புல்லா, இஸ்ரேல்
இதனால், ஹிஸ்புல்லா அமைப்பை முழுமையாக அழிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இஸ்ரேல் லெபனான் மீதும் கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறது
எனினும், இந்த 5 மாத காலக்கட்டத்தில் பலமுறை அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற நிலையில், ஈரானின் முக்கியக் கோரிக்கைகளில் ஒன்றாக லெபானன் மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்பது இருந்து வந்தது. ஆனாலும், இரு நாடுகளுக்கு இடையேயான அனைத்துப் பேச்சு வார்த்தைகளும் தோல்வியிலேயே முடிந்து வளைகுடாவில் மீண்டும் மோதல் அதிகரித்திருக்கிறது. அதேபோல, லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களும் தொடர்ந்து வருகின்றன.
இந்தசூழலில் தான், கடந்த மார்ச் மாதம் ஹிஸ்புல்லா பொதுச்செயலாளர் ஷேக் நைம் புதிதாக பொறுப்பேற்ற ஈரான் உச்சத்தலைவர் மொஜ்தபா காமேனிக்கு வாழ்த்து தெரிவித்ததுடன், ஈரானுக்கு முழுமையாக ஆதரவு தருவதாக கடிதம் எழுதியிருந்தார்.
இதையடுத்து, அவரது கடிதத்திற்கு பதிலளிக்கும் வகையில், ஈரான் உச்சத் தலைவர் மொஜ்தபா காமேனி எழுதிய கடிதம் தற்போது வெளியாகியிருக்கிறது. அதில், ”அமெரிக்காவுடன் எத்தகைய போர் நிறுத்தமாக இருந்தாலும், ஈரானின் முதல் நிபந்தனையாக லெபனான் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என்பதாகத் தான் இருக்கும். லெபனானின் பிராந்திய ஒருமைப்பாட்டையும், ஹிஸ்புல்லாவையும் பாதுகாப்பது ஈரானின் கடமையாகும். அதேபோல, இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான ஒரே வழி, போரை தொடர்ந்து முன்னெடுப்பது தான்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
