வயநாட்டில், சுரங்கப் பணிகளால் குவிக்கப்பட்ட மண் அகற்றப்படாததால் ஏற்பட்ட மனிதத் தவறு காரணமாகவே நிலச்சரிவு விபத்து நேரிட்டது தெரியவந்துள்ளது.
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்திலுள்ள கல்லாடி பகுதியில் சுரங்கப்பாதை பணிகள் நடைபெறும் பகுதி அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் 5 பேர்உயிரிழந்தனர். நிலச்சரிவின்போது பதிவான மிரட்சியூட்டும் காட்சி வெளியானது. நிலச்சரிவில் சிக்கிய லாரி, பல அடி தூரத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டது. இதனைக் கண்ட மக்கள், அச்சத்தில் ஓடிய காட்சிகளும், சிலர் மண் சேற்றுக்குள் சிக்கியதும் இந்த காட்சியில் பதிவாகி இருந்தது. இதற்கிடையே, கேரளாவின் வயநாடு இரட்டைச் சுரங்கப்பாதை பணிகளை தற்காலிகமாக நிறுத்தும்படி, கடந்த ஜூன் 20ஆம் தேதி ஆட்சியர் விடுத்த எச்சரிக்கை அலட்சியப்படுத்தப்பட்டதே நிலச்சரிவு பேரிடருக்கு காரணம் என தெரியவந்துள்ளது. சுரங்கப் பணிகளால் குவிக்கப்பட்ட மண் அகற்றப்படாததால் ஏற்பட்ட மனிதத் தவறு காரணமாகவே விபத்து நேரிட்டது தெரியவந்துள்ளது.

கொங்கன் ரயில்வே கார்ப்பரேஷன் மற்றும் திலீப் பில்ட்கான் நிறுவனங்களின் இந்த அலட்சியம் குறித்து முதல்வர் வி.டி.சதீசன் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் சன்னி ஜோசப் தெரிவித்துள்ளார். மேலும், வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியை கேரள முதல்வர் சதீசன் இன்று பார்வையிடுகிறார். இன்று அமைச்சரவை கூட்டத்திற்குப் பிறகு வயநாடு செல்ல உள்ளதாக கூறியுள்ள சதீசன், மதியம் 1 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்ட மீனாட்சி பாலத்தைப் பார்வையிடுவதாகவும் தெரிவித்துள்ளார். இந்தப் பேரிடரால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்துடனும் தாங்கள் உறுதுணையாக நிற்போம் என்றும், கேரளம் வயநாடுடன் ஒற்றுமையாக நிற்கிறது எனவும் முதல்வர் சதீசன் குறிப்பிட்டுள்ளார்.
