ஈரான் – அமெரிக்கா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், அலி காமேனியின் அரசு மரியாதையுடன் கூடிய இறுதிச்சடங்கு நிகழ்வுகள் ஈரானில் களைகட்டியுள்ளன.
அலி காமேனியின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை கொல்வோம் என ஒருவர் ஆவேசமாகக் கத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அணு ஆயுதம் தொடர்பாக கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி, அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து நடத்திய தாக்குதலில், ஈரானில் 36 ஆண்டுகளுக்கும் மேலாக ஓர் அசைக்க முடியாத சக்தியாக இருந்த அயதுல்லா அலி காமேனி, முதல் நாளிலேயே கொல்லப்பட்டார். தொடர்ந்து மத்திய கிழக்கில் போர் நடைபெற்றதால், காமேனியின் இறுதிச்சடங்கு பலமுறை ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையே ஈரான் – அமெரிக்கா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், அலி காமேனியின் அரசு மரியாதையுடன் கூடிய இறுதிச்சடங்கு நிகழ்வுகள் ஈரானில் களைகட்டியுள்ளன.

கடந்த ஜூலை 4ஆம் தேதி ஈரானின் தெஹ்ரானில் அதற்கான விழாக்கள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், ஊர்வலங்கள் மற்றும் புனித தலங்களில் தரிசனத்துடன் ஜூலை 9ஆம் தேதி மஷ்ஹத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட இருக்கிறது. இந்த நிலையில், அலி காமேனியின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை கொல்வோம் என ஒருவர் ஆவேசமாகக் கத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
காமேனியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தவந்த முகமது ரசூலி என்ற கவிஞர், ’ட்ரம்ப்பை வீழ்த்துவோம்; அமெரிக்காவை வீழ்த்துவோம்; இஸ்ரேலை வீழ்த்துவோம்’ என முழங்கினார். ’உலகின் மோசமான மனிதரை இன்னும் ஏன் விட்டு வைத்திருக்க வேண்டும்’ என்றும் அவர் முழங்கினார். இதைக் கேட்டு அங்கு கூடியிருந்தோர் ஆவேசமாகப் பதில் குரல் எழுப்பினர்.

முன்னதாக, கொல்லப்பட்ட ஈரான் தலைவர் அலி காமேனியின் இறுதிச்சடங்கு கூட்டத்தின் மீது ராணுவ ரீதியாக தாக்கியிருக்கலாம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறிய கருத்து விமர்சனங்களை எழுப்பியிருந்தது. அதற்குப் பதிலடி கொடுத்த ஈரானுக்கான அர்மீனியா தூதரகம், 250ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் அமெரிக்காவிற்கு நாகரிகமும், வரலாறும், கௌரவமும் இல்லை எனச் சாடியுள்ளது. வாசனைத் திரவிய பாட்டிலை உடைத்தாலும் அதன் நறுமணம் பரவுவதைத் தடுக்க முடியாது என்றும் அதைப்போல காமேனியின் கொள்கைகள் பரவும் எனவும் கூறியுள்ளது.
