தமிழ்நாடு காங்கிரஸின் தேர்தல் மேலாண்மை மற்றும் ஒருங்கிணைப்புக் குழு பொறுப்பில் இருந்து எம்.பி மாணிக்கம் தாகூர் விலகல்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23 ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் 28 இடங்களில் போட்டியிடுகிறது. முன்னதாக, ஆட்சியில் அதிகாரத்தில் பங்கு என மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் சிலர் திமுகவை வலியுறுத்தி வந்த நிலையில், கூட்டணி உடன்பாடு எட்டுவதில் இரு கட்சிகள் இடையே தொடர்ந்து சிக்கல் நீடித்து வந்தது. தவெகவுடன் கூட்டணி வைக்கலாம் என காங்கிரஸின் ஒரு சில குரல்கள் எழுந்தாலும், பல கட்ட பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு திமுகவுடனான காங்கிரஸின் கூட்டணி தற்போது உறுதியாகியிருக்கிறது.

திமுக காங்கிரஸ் கூட்டணி
அதேநேரம், கூட்டணி சிக்கல் முடிந்தாலும், காங்கிரஸில் நிலவும் சிக்கல் தொடர்ந்தே வருகிறது. தாங்கள் போட்டியிடவுள்ள தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துவிட்டு வேட்புமனு தாக்கல் மற்றும் பரப்புரை என அடுத்தக்கட்ட பணிகளில் அரசியல் கட்சிகள் இறங்கியுள்ள நிலையில், காங்கிரஸில் வேட்பாளர்களை அறிவிப்பதிலேயே சிக்கல் நீடித்து வருகிறது. இந்த சூழலில் தான், காங்கிரஸின் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதற்கான தேர்வுக் குழுகூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் தான், காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தேர்தல் மேலாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கேவிடம் கடிதத்தையும் அளித்துள்ளார். ஏற்கனவே, காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் சிக்கல் நீடித்து வரும் நிலையில், மாணிக்கம் தனது தேர்தல் பொறுப்பில் இருந்து விலகியிருப்பது. பேசுபொருளாகியிருக்கிறது.
