சென்னையின் நுழைவாயில் என அழைக்கப்படும் செங்கல்பட்டு மாவட்டம், 2019-இல் உருவான பிறகு அபரிமிதமான வளர்ச்சியை எட்டியுள்ளது.
Summary
யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற சுற்றுலாத் தளங்கள், உலகத் தர தொழில்துறை, உயர்ந்த கல்வியறிவு, நகர்ப்புற வளர்ச்சி என செங்கல்பட்டு மாவட்டம் திமுக கூட்டணியின் கோட்டையாக திகழ்கிறது. 7 தொகுதிகளில் 6 இடங்கள் திமுக கூட்டணிக்கே சொந்தம். இந்நிலையில் பல்லாவரம், தாம்பரம், சோழிங்கநல்லூரில் நகர்ப்புற நடுத்தரவர்க்க வாக்குகள், ஊரக வன்னியர்–ஆதிதிராவிடர் வாக்குகள் முடிவை நிர்ணயிக்க உள்ளன.
யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற மாமல்லபுரம், வண்டலூர் உயிரியல் பூங்கா மற்றும் ஆசியாவிலேயே புகழ்பெற்ற வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் எனச் சுற்றுலாத் தலங்களின் சங்கமமாக இது திகழ்கிறது. தொழில்துறையைப் பொறுத்தவரை, ஹூண்டாய், மகேந்திரா வேர்ல்ட் சிட்டி என உலகத்தரம் வாய்ந்த நிறுவனங்களின் கூடாரமாக விளங்கும் அதே வேளையில், மதுராந்தகம் போன்ற பகுதிகளில் விவசாயமும் செழித்து வளர்கிறது.

mahabalipuram
80 சதவீதத்திற்கும் அதிகமான கல்வியறிவு கொண்ட இம்மாவட்டம், 51 சதவீத நகர்ப்புற வளர்ச்சியைக் கண்டுள்ளது. 7 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய செங்கல்பட்டில், சுமார் 28 லட்சம் வாக்காளர்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றக் காத்திருக்கின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தமுள்ள 7 தொகுதிகளில் 6 தொகுதிகள் திமுக கூட்டணி வசம் உள்ளன. திமுகவிடம் 4 தொகுதிகளும், விசிக வசம் 2 தொகுதிகளும் உள்ளன. முந்தைய தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றிருந்தது.
சுமார் 5 லட்சத்து 36 ஆயிரம் வாக்காளர்களைக் கொண்ட தமிழகத்தின் மிகப்பெரிய தொகுதிகளில் ஒன்றான சோழிங்கநல்லூரில், திமுகவின் எஸ்.அரவிந்த் ரமேஷ் தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். 2011 முதல் நடந்த தேர்தல்களில் திமுக 2 முறையும், அதிமுக ஒரு முறையும் இங்கு வெற்றி பெற்றுள்ளன.

திமுக கொடி
பல்லாவரம் மற்றும் தாம்பரம் தொகுதிகள் திமுகவின் பலமான அரண்களாகத் திகழ்கின்றன. குறிப்பாகத் தாம்பரத்தில் கடந்த 25 ஆண்டுகளில் 7 முறை திமுக வெற்றி வாகை சூடியுள்ளது. தற்போது பல்லாவரத்தில் இ. கருணாநிதியும், தாம்பரத்தில் எஸ்.ஆர். ராஜாவும் மக்கள் பிரதிநிதிகளாக உள்ளனர்.
செங்கல்பட்டு மற்றும் திருப்போரூர் தொகுதிகளில் திமுக மற்றும் அதிமுக இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. செங்கல்பட்டில் திமுக 7 முறை வென்றுள்ள நிலையில், திருப்போரூரில் தற்போது விசிக-வின் எஸ்.எஸ்.பாலாஜி எம்.எல்.ஏ-வாக உள்ளார்.
செய்யூர் மற்றும் மதுராந்தகம் ஆகிய தனித் தொகுதிகளில் போட்டி கடுமையாக உள்ளது. செய்யூரில் விசிகவின் பனையூர் எம்.பாபுவும், மதுராந்தகத்தில் அதிமுகவின் மரகதம் குமரவேலும் தற்போது பதவியில் உள்ளனர்.

ஸ்டாலின் – எடப்பாடி கே.பழனிசாமி
குறிப்பாக மதுராந்தகத்தில் திமுக மற்றும் அதிமுக தலா 6 முறை வெற்றி பெற்றுச் சமபலத்துடன் விளங்குகின்றன. செங்கல்பட்டு மாவட்டத்தில் திமுக கூட்டணி வலுவாக உள்ள நிலையிலும் வேட்பாளர்கள் தேர்வில் பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
திமுகவில் சிட்டிங் எம்.எல்.ஏ-க்களான இ.கருணாநிதி, எஸ்.ஆர். ராஜா ஆகியோருக்கு வாய்ப்பு தரப்படவில்லை. இதேபோல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் எஸ்.எஸ்.பாலாஜி, பனையூர் எம்.பாபு ஆகிய சிட்டிங் எம்.எல்.ஏ-க்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை

திருமாவளவன்
செங்கல்பட்டு மாவட்டத்தின் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்திகளாகச் சாதியக் கட்டமைப்புகளும், நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினரும் உருவெடுத்துள்ளனர். குறிப்பாக, மதுராந்தகம், செய்யூர் மற்றும் திருப்போரூர் ஆகிய ஊரகப் பகுதிகளில் வன்னியர் மற்றும் ஆதிதிராவிடர் சமூக மக்களின் வாக்குகள் எந்தப் பக்கம் சாய்கிறதோ, அவர்களுக்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அதேசமயம், தாம்பரம், பல்லாவரம் மற்றும் நாட்டின் மிகப்பெரிய தொகுதியான சோழிங்கநல்லூர் பகுதிகளில், வெளிமாவட்டங்களில் இருந்து குடியேறிய நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் ஐடி ஊழியர்களின் வாக்குகள் மிக முக்கிய காரணியாகப் பார்க்கப்படுகின்றன. உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளை மையமாக வைத்தே மக்கள் ஆதரவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
