மஹாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவாரின் மரணம் விபத்தல்ல, ஒரு திட்டமிடப்பட்ட சதி என்று அவரது மருமகனும் எம்.எல்.ஏ.வுமான ரோகித் பவார் குற்றம்சாட்டியுள்ளார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மகாராஷ்டிரா மாநில துணை முதல்வருமான அஜித் பவார் கடந்த ஜன.28ஆம் தேதி காலை விமான விபத்தின்போது உயிரிழந்தார். உள்ளாட்சித் தேர்தல்கள் தொடர்பான கூட்டங்களில் கலந்துகொள்வதற்காக புனேயில் இருந்து அவர் பாராமதிக்கு தனி விமானத்தில் சென்றார். அந்த விமானம் தரையிறங்க முயன்றபோது, இந்த விபத்து ஏற்பட்டது. இந்த விமான விபத்தில் அஜித் பவாருடன், அவரது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி, ஓர் உதவியாளர், விமானி-இன்-கமாண்ட் மற்றும் முதல் அதிகாரி என 5 பேரும் உயிரிழந்தனர். இந்த நிலையில், அஜித் பவாரின் மரணம் விபத்தல்ல, ஒரு திட்டமிடப்பட்ட சதி என்று அவரது மருமகனும் எம்.எல்.ஏ.வுமான ரோகித் பவார் குற்றம்சாட்டியுள்ளார்.

ரோகித் பவார்
மும்பையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், 54 ஸ்லைடுகள் கொண்ட விளக்கக்காட்சியை சமர்ப்பித்த அவர், விபத்துக்குள்ளான விமானத்தின் டிரான்ஸ்பாண்டர் கடைசி ஒரு நிமிடம் வேண்டுமென்றே அணைக்கப்பட்டது ஏன் என்றும், அனுபவம் வாய்ந்த விமானிகளுக்குப் பதிலாக மதுப்பழக்கத்திற்காக முன்பு பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஒரு விமானி கடைசி நேரத்தில் நியமிக்கப்பட்டது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார். இதை விசாரிக்க மாநில சி.ஐ.டி விசாரணை போதுமானதாக இருக்காது எனக் குறிப்பிட்ட ரோகித்பவார், அமெரிக்காவின் NTSB, பிரான்சின் BEA அல்லது இங்கிலாந்தின் AAIB போன்ற சர்வதேச நிபுணத்துவ ஏஜென்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
