பாகிஸ்தான் தற்போது மிகவும் இக்கட்டான சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரல் 22ஆம் தேதி அன்று, காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், சுற்றுலாவுக்கு வந்த பயணிகள் மீது, பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியிருந்தனர். 26-க்கும் மேற்பட்டவர்கள் பரிதாபமாக உயிரிழந்த இந்த விவகாரம், இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து, இந்தியா ’ஆபரேஷன் சிந்தூர்’ என்ற ராணுவ நடவடிக்கையை கையில் எடுத்தது.
இதுமட்டுமின்றி, எல்லை தீவிரவாதத்திற்கு பாகிஸ்தான் ஆதரவளிப்பதால், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்தது. பாகிஸ்தானின் பெருமளவிலான நீர் ஆதாரம் சிந்து நதியை நம்பியே இருப்பதால், அந்நாட்டில் பெரும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது. இப்படியான சூழலில், பாகிஸ்தானில் மிகவும் கடுமையான நீர் பற்றாக்குறை நிலவி வருவதாகவும், இதே நிலை நீடித்தால் மிகப்பெரிய வறட்சி மற்றும் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

indus waters treaty
ஆனால், இவ்வளவு மோசமான நிலை வருவதற்கு, சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது மட்டுமே காரணம் இல்லை. பாகிஸ்தான் ஆட்சியாளர்களின் அலட்சியம்தான் முக்கியக் காரணமாக பார்க்கப்படுகிறது. அதாவது, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின்படி, 80 சதவீத நீர் பாகிஸ்தானுக்கு மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்தது. இருப்பினும், 1970-களுக்கு பிறகு, பெரிய அளவிலான அணைகளைக் கட்டாத பாகிஸ்தான், நீர் சேமிப்புத் திட்டங்களையும் உருவாக்கவில்லை. இதன்விளைவாக, 90 நாட்களுக்கான நீரைச் சேமித்து வைப்பதற்கான கட்டமைப்பு மட்டுமே பாகிஸ்தானிடம் உள்ளது.
பொதுவாக, மற்ற நாடுகளிடம் கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கான நீரைச் சேமித்து வைக்கும் கட்டமைப்புகள் உள்ளன. மேலும், ஆயுதங்கள் வாங்குவது, பாதுகாப்புத் துறையில் மேம்படுத்துவது மாதிரியான விஷயங்களில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி வரும் பாகிஸ்தான், புதிய அணைகளை கட்ட முயற்சிகள் மேற்கொள்ளவில்லை.

indus waters treaty
இதன் விளைவாக, பாகிஸ்தானின் 45 சதவீத நதிநீர் வீணாக கடலில் கலக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இவ்வாறு முந்தைய ஆட்சியாளர்கள் அலட்சியமாக இருந்ததால், அந்நாட்டின் மக்கள் கடுமையான வறட்சிக்கு ஆளாக வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
