பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரிய மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது..
பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ.மார்க்கண்டேயன் மீது வழக்கு பதிவுசெய்யக் கோரிய மனுவை தள்ளுபடிசெய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தைச் சேர்ந்த பா.ஜ.க பிரமுகர் பார்த்திபன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், விளாத்திகுளம் அருகே உள்ள பெரியசாமிபுரத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய தற்போதைய திமுக எம்.எல்.ஏ, மார்க்கண்டேயன், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிரதமர் மோடி தான் காரணம் என, உண்மைக்கு புறம்பாகவும் பேசினார்.

அவருடைய அவதூறு பேச்சு தொடர்பாக காவல்துறையில் புகார்அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் புகார் மனு மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிடகோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி லட்சுமி நாராயணன், மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தனிநபர் புகார் மனு தாக்கல் செய்து நிவாரணம் பெறலாம் என மனுதாரருக்கு அனுமதியளித்து, மனுவை தள்ளுபடிசெய்து உத்தரவிட்டார்.
