தமிழ்நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று (ஆகஸ்ட் 1) தொடங்கி ஆகஸ்ட் 30-ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது.
இந்தியாவில் இதுவரை 15 மக்கள்தொகை கணக்கெடுப்புகள் நடைபெற்றுள்ளன. இதில் சுதந்திரத்திற்கு பிறகு மட்டும் 7 கணக்கெடுப்புகள் நடந்துள்ளன. ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை கணக்கெடுப்பு நடத்தப்படும் நிலையில் 2021ஆம் ஆண்டு நடத்தப்படவேண்டிய கணக்கெடுப்பு கொரோனா காரணமாக நடைபெறவில்லை. இந்தச்சூழலில் தான், 5 ஆண்டு தாமதத்திற்கு பிறகு மக்கள்தொகை கணக்கெடுப்பு இந்தியா முழுவதும் தற்போது நடைபெறுகிறது. ஏப்ரல் மாதம் செப்டம்பர் மாதத்திற்குள் தங்கள் விருப்பப்படி மாநிலங்கள் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளில் ஈடுபடலாம் என மத்திய அரசு தெரிவித்திருந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று (ஆகஸ்ட் 1) தொடங்கி ஆகஸ்ட் 30-ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது.

இந்திய மக்கள்
இதுகுறித்து மத்திய தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”தமிழ்நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று முதல் வருகிற 30ம்தேதி வரை நடைபெற உள்ளது. இந்த பணியில்19 ஆயிரம் அதிகாரிகளின் மேற்பார்வையில் 1.15 லட்சம் கணக்கெடுப்பாளர்கள் ஈடுபட உள்ளனர். வீடுகளின் எண்ணிக்கை, வீடுகளின் நிலை, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, சமையல் எரிவாயு பயன்பாடு, மின்வசதி, இணைய வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்பாக 33 கேள்விகள் மட்டுமே கேட்கப்படும். 1948-ம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்புச் சட்டப்படி, சேகரிக்கப்படும் தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், தமிழ்நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக ஜூலை 17 முதல் ஜூலை 31 வரை சுய கணக்கெடுப்பு வசதி வழங்கப்பட்டது. இந்த காலகட்டத்தில், பொதுமக்கள் விரும்பினால் மத்திய அரசின் அதிகாரப்பூர்வ கணக்கெடுப்பு இணையதளம் அல்லது செயலி மூலம் தங்களது குடும்பம் மற்றும் வீட்டு விவரங்களை தாங்களாகவே பதிவு செய்யலாம். பதிவு வெற்றிகரமாக முடிந்ததும் SE ID (Self-Enumeration ID) வழங்கப்பட்டது. இந்த நிலையில், ஆன்லைனில் பதிவு செய்தவர்கள் வீட்டிற்கு வரும் கணக்கெடுப்பாளரிடம் காட்ட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முதல் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு பிறகு, 2027 பிப்ரவரியில் 2ஆம் கட்ட கணக்கெடுப்பு நடைபெறும். இதன்பின் 2027 மார்ச் ஒன்றாம் தேதி மக்கள் தொகை விவரம் அறிவிக்கப்படும் என ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
