அமெரிக்கா எடுத்த முக்கிய முடிவால் உலக முதலீட்டாளர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
உலகளாவிய வர்த்தகப் பரிவர்த்தனைகளில் 85% முதல் 90% வரை அமெரிக்க டாலர் மூலமே நடைபெறுகிறது. இதன் காரணமாக உலகின் சக்தி வாய்ந்த நாணயமாக அமெரிக்க டாலர் கருதப்படுகிறது. அமெரிக்க டாலர் இருந்தால் மட்டுமே பிற நாடுகளுடன் வர்த்தகம் செய்யும் சூழல் உள்ளதால், அதனைப் பல்வேறு நாடுகளும், தனியார் நிறுவனங்களும் வாங்கிக் குவித்து வருகின்றனர்.

அமெரிக்க டாலர்
அதேபோல அமெரிக்க டாலரை வெளியிடும் மத்திய ரிசர்வ் வங்கியான ஃபெடரல் வங்கியும் பல்வேறு வகையிலான பத்திரங்களை வெளியிட்டு வருகிறது. இந்தப் பத்திரம் வாங்கியவர்களுக்கு ஆண்டுதோறும் ஃபெடரல் வங்கி வட்டி வழங்கி வருவதால், இந்தப் பத்திரங்களுக்கான தேவை அதிகரித்தவண்ணம் உள்ளது. சீனா, ஜப்பான் போன்ற நாடுகள் பல ஆயிரம் கோடி மதிப்பிலான டாலர் பத்திரங்களை பல ஆண்டுகளாக வாங்கிக் குவித்து வருகின்றன.
இந்தச் சூழலில் கடந்த சில ஆண்டுகளாக டாலருக்கு மாற்றாக சீனா, இந்தியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் தங்கள் சொந்த நாணயத்தில் வர்த்தகம் செய்யத் தொடங்கியுள்ளது. அதேபோல அமெரிக்காவும் பல்வேறு பொருளாதாரச் சிக்கல்களில் தவித்து வருகிறது. இதுபோன்ற காரணங்களால் அமெரிக்க டாலருக்கான தேவை குறையத் தொடங்கியுள்ளது.
இந்தச் சூழலில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பல்வேறு நாடுகளுக்கும் கூடுதல் வரிகளை விதித்து வந்ததால், டாலர் மீதான நம்பிக்கையைப் பல்வேறு நாடுகளும் இழந்தன. இதனால் தங்கள் வசம் உள்ள அமெரிக்க டாலர் பத்திரங்களை சர்வதேச சந்தையில் விற்று அதற்குப் பதிலாக தங்கத்தை வாங்கிக் குவித்தன. இதனால் தங்கத்தின் விலை உலகளவில் கடுமையாக அதிகரித்ததோடு, டாலரின் மதிப்பும் குறைந்து வந்தது.
அமெரிக்காவின் ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில், ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களைக் குறைக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். ஆனால், அப்படிச் செய்தால் அது அமெரிக்க டாலரின் மதிப்பையும், தேவையையும் குறைக்கும் என்று விமர்சனம் எழுந்தது. அதேபோல, வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டால் அமெரிக்க பத்திரங்களுக்கு வழங்கவேண்டிய வட்டித் தொகையும் குறையும். இதனால் உலக நாடுகள் அமெரிக்கப் பத்திரங்களை மேலும் விற்கத் தொடங்குவர் என்றும் கூறப்பட்டது.

us federal bank reuters
இந்தச் சூழலில் நேற்று ஃபெடரல் வங்கியின் உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஃபெடரல் ரிசர்வ் வங்கி கொள்கைக் குழுவின் 12 உறுப்பினர்களில் 9 பேர் வட்டி விகிதத்தை அப்படியே வைத்திருக்க வேண்டும் என்று வாக்களித்தனர். அதேபோல மீதம் உள்ள 3 உறுப்பினர்கள் பணவீக்கம் அதிகமாக இருப்பதைச் சுட்டிக்காட்டி வட்டி விகிதத்தை மேலும் உயர்த்த வேண்டும் என்று வாக்களித்துள்ளனர். இதன் காரணமாக அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி, நாட்டின் வட்டி விகிதங்களை மாற்றமின்றி 3.50% முதல் 3.75% என்ற அளவிலேயே தொடரும் என்று அறிவித்துள்ளது. இதன் காரணமாக அமெரிக்க டாலரின் முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்களும், உலக நாடுகளும் நிம்மதி அடைந்துள்ளனர். அதேநேரம் தனது கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஃபெடரல் ரிசர்வ் வங்கி மீது கடும் கோபத்தில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
