அமைச்சர்கள் இலாகா தொடர்பான புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கோரிக்கையை, மத்திய அரசு ஏற்க மறுத்துள்ளதால், அந்த கூட்டணி முடிவுக்கு வர வாய்ப்புள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வென்று ஆட்சி அமைத்துள்ளது. அந்தக் கூட்டணி சார்பில் என்.ஆர் காங்கிரஸ் 12 இடங்களிலும், பாஜக 4 இடங்களிலும் அதிமுக மற்றும் ல.ஜ.க தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில் தேர்தல் முடிவுகள் வெளியாகி இரண்டரை மாதங்கள் ஆகும் நிலையில், இதுவரை அமைச்சர்களுக்கு இலாக்காக்கள் ஒதுக்கப்படாமல் உள்ளது. தேர்தலுக்கு முன்பு என்.ஆர். காங்கிரசுக்கு அமைச்சரவையில் மூன்று இடங்களும் பாஜகவிற்கு இரண்டு இடங்கள் மற்றும் சபாநாயகர் பதவி என ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் முக்கிய இலாக்காக்கள் ஒதுக்குவது தொடர்பாக பாஜக மற்றும் என்.ஆர் காங்கிரஸ் இடையே இறுதி உடன்பாடு எட்டப்படாத நிலை உள்ளது. இந்தச் சூழலில் கடந்த 20-ஆம் தேதி அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்குவது தொடர்பான பட்டியலை துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனை சந்தித்து முதலமைச்சர் ரங்கசாமி வழங்கினார். அதனை துணைநிலை ஆளுநர் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பியதாகவும் செய்திகள் வெளியானது.
ஆனால், இந்தப் பட்டியல் வழங்கப்பட்டு 9 நாட்கள் ஆகும் நிலையில், இன்னமும் இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சர் ரங்கசாமி பாஜக எம்.எல்.ஏக்களுக்கு வழங்கிய இலாக்காக்கள் பாஜகவுக்கு திருப்தி அளிக்காததால்தான் இன்னும் இந்த அறிவிப்பு வெளியாகவில்லை என்று கூறப்படுகிறது.

இதனிடையே அமைச்சர்களுக்கான இலாகா ஒதுக்கீடு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு முதலமைச்சர் ரங்கசாமி, ’’எந்த நேரத்தில் கணக்குத் தீர்க்க வேண்டுமோ, அந்த நேரத்தில் கணக்குத் தீர்ப்பேன்” எனக் கூறிவிட்டு சென்றார். இதன் காரணமாக, பாஜக – என்.ஆர்.காங்கிரஸ் உறவில் சிக்கல் நிலவுவதாகவும், இதனால் இந்தக் கூட்டணியே முறியும் அபாயம் உள்ளதாகவும் அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
