தமிழ்நாட்டில் நீரிழிவு நோய் பாதிப்பு மிக அபாயகரமாக உயர்ந்துள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
Summary
தமிழ்நாட்டில் நீரிழிவு நோய் வேகமாக அதிகரித்து, 2020இல் 18% இருந்த பாதிப்பு தற்போது 23% ஆக உயர்ந்துள்ளது. 18 வயதுக்கு மேற்பட்ட 1.5 கோடி மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில், நான்கில் ஒருவருக்கு நீரிழிவு உள்ளது. உடல் உழைப்புக் குறைவு, அதிக அரிசி உணவு காரணமாக தென் மாநிலங்களில் பாதிப்பு அதிகம். சிறுநீரக செயலிழப்பு, பார்வை குறைபாடு, ஆறாத புண்கள் போன்ற பக்கவிளைவுகள் உயிரிழப்பை ஏற்படுத்துகின்றன.
தமிழ்நாட்டில் கடந்த 2020-ல் 18 சதவீதமாக இருந்த நீரிழிவு பாதிப்பு, தற்போது 23 சதவீதமாக அதிகரித்துள்ளது. வெறும் 4 ஆண்டுகளில் 5% பேர் கூடுதலாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், உலகச் சுகாதார அமைப்பு, சென்னையில் உள்ள தேசிய நோய்ப் பரவியல் நிறுவனம் நடத்திய ஆய்வுகளில் இந்தத் தகவல்கள் தெரிய வந்துள்ளன.

சர்க்கரை நோய்
தமிழ்நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்டோரில் 1 கோடியே 50 லட்சம் பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது, தமிழ்நாட்டில் நான்கில் ஒருவருக்கு நீரிழிவு நோய் உள்ளது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருச்சி மற்றும் சேலம் ஆகிய நகரங்களில் இதன் பாதிப்பு மிக அதிகம்.
பாதிக்கப்பட்டவர்களில் 20 சதவீதம் பேர் மட்டுமே மாத்திரைகள் மூலம் சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அதிர்ச்சியூட்டும் விதமாக, 50 லட்சம் பேர் நோய் இருப்பதை அறிந்தும் மாத்திரை சாப்பிடாமல் அலட்சியமாக இருக்கிறார்கள். சர்க்கரை அளவு 140ஐத் தாண்டும் போதே முறையான மருத்துவரை அணுக வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
3 முக்கிய பாதிப்புகள் ஏற்படும்..
உடல் உழைப்புக் குறைவு மற்றும் அதிகப்படியான அரிசி உணவுப் பழக்கம் காரணமாகவே வட மாநிலங்களைவிடத் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் இந்த பாதிப்பு அதிகமாக உள்ளது. இதனால் சிறுநீரகச் செயலிழப்பு, கண் பார்வை குறைபாடு, ஆறாத புண்கள் போன்ற 3 முக்கிய பக்கவிளைவுகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

நீரிழிவு நோய்
இதனைக் கட்டுப்படுத்த அரசின் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டம் மூலம் 1 புள்ளி 5 கோடி பேர் கண்டறியப்பட்டு, இல்லங்களுக்கே சென்று மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன. நீரிழிவு நோய் அறிகுறிகள் தெரிந்தால் பொதுமக்கள் உடனே மருத்துவரை அணுக சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
